மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இன்று மிக முக்கியமான மற்றும் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மதுரை எழுமலையைச் சேர்ந்த ராம. ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில், கடந்த ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தார். ஆனால், திருக்கார்த்திகை நாளான டிசம்பர் 3-ஆம் தேதி அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 4-ஆம் தேதி இரவு மனுதாரர் உட்பட 10 பேர் மலைக்கு சென்று தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்தும், கோவில் நிர்வாகம் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இந்தத் தொடர் அலட்சியத்தை அடுத்து தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மதுரை மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன்குமார், மாநகரக் காவல் ஆணையர் ஜெ. லோகநாதன், காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் மற்றும் கோவில் செயல் அலுவலர் ஆகியோர் சார்பில் மன்னிப்பு கோரி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கார்த்திகைத் தீபத்தன்று உத்தரவை நிறைவேற்ற முயன்றபோது இந்து முன்னணி அமைப்புகளுக்கும், மாற்று மதத்தினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாலும், சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை காரணமாகவுமே உத்தரவை நிறைவேற்ற முடியாமல் போனது” என்று வாதிட்டு, வழக்கை முடித்து வைக்கக் கோரினார்.
இருப்பினும், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இந்த வாதத்தை முழுமையாக ஏற்கவில்லை. “இந்துக்களுக்கு சொந்தமான பகுதியில் தான் தீபத்தை ஏற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றம் சொல்லும் ஐந்து நபர்களை மலை உச்சிக்கு சென்று பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இந்த அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.