டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, CBI டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ‘சட்டவிரோதமானது’ என்று சாடியுள்ள CBI, 974 பக்கங்கள் கொண்ட சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி 27-ம் தேதி அன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சிசோடியா மற்றும் கே.கவிதா உள்ளிட்ட 23 குற்றம் சாட்டப்பட்டவர்களையும் விடுவித்து உத்தரவு பிறப்பித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் CBI தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ‘ஊகங்களின் அடிப்படையில்’ உள்ளதே தவிர உறுதியான சாட்சியங்கள் இல்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் விமர்சித்திருந்தார். மேலும் இந்த வழக்கை விசாரித்த CBI அதிகாரி மீது துறைரீதியான விசாரணை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உடனடியாக டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ள CBI, தனது மனுவில், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அதில் வெளிப்படையான பிழைகள் இருப்பதாகவும் CBI குற்றம் சாட்டியுள்ளது. மேலும், குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் கட்டத்திலேயே முழுமையான விசாரணையைப் போல நீதிபதி ஒரு ‘மினி ட்ரையல்’ நடத்தியது தவறு என்றும் CBI தெரிவித்துள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான முக்கிய ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை விசாரணை நீதிமன்றம் முறையாகப் பரீசிலிக்கத் தவறியதாகவும், வழக்கை விசாரித்த CBI அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க பிறப்பித்த உத்தரவு அதிர்ச்சியளிப்பதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் CBI கோரியுள்ளது.
CBI தாக்கல் செய்துள்ள இந்த மேல்முறையீட்டு மனு ஹோலி விடுமுறைக்குப் பிறகு மார்ச், 9-ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆம் ஆத்மி கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியாகவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்குக் கிடைத்த பதிலடியாகவும் பார்க்கப்பட்டது. தீர்ப்புக்கு பின் பேசிய கெஜ்ரிவால், “நான் ஊழல்வாதி இல்லை என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.” என்று உணர்ச்சிபொங்கக் கூறியிருந்தார்.
ஆனால் CBI தற்போது மேல்முறையீடு செய்ட்துள்ளதால், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியா மீதான சட்டப் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
மார்ச்.9-ம் தேதி உயர்நீதிமன்றம் என்ன முடிவெடுக்கும் என்பதைப் பொறுத்தே இந்த வழக்கின் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும்.