இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்ற வரலாற்று நிகழ்வுகளுக்கு யாரும் காப்புரிமை கோர முடியாது என பராசக்தி பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் ரவிமோகன், சிவகார்த்திகேயன், அதர்வா நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் கதை தனது ‘செம்மொழி’ கதையிலிருந்து திருடப்பட்டது என இணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில், பட தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் (DAWN Pictures) சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், கடந்த 1965ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒரு வரலாற்று நிகழ்வு என்றும், இதுபோன்ற வரலாற்றுச் சம்பவங்கள் அல்லது சமூகப் போராட்டங்கள் மீது எந்த தனிநபரும் காப்புரிமையோ அல்லது தனியுரிமையோ கோர முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் கதைக்களம் வேண்டுமானால் போராட்டக் காலத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம், ஆனால் கதாபாத்திரங்கள், வசனங்கள், திரைக்கதை ஆகியவை முற்றிலும் கற்பனையானவை என்றும், தனித்துவமானவை என்றும் தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில், படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்காமல், வழக்கு விசாரணையை பிப்ரவரி 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.