ஏற்கனவே உள்ள நூலகத்திற்கு அருகிலேயே புதிய நூலகம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை, கிராமத்தின் அடிப்படை வசதிகளுக்குப் பயன்படுத்த உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. ஒரு திட்டத்தை செயல்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவு என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
வழக்கின் பின்னணி
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை சேர்ந்த வழக்கறிஞர் கே. ராஜாராம் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், பாளையத்தில் 2002-ம் ஆண்டு முதல் 1,000 சதுரடியில் ஓர் அரசு நூலகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பழைய நூலகத்திற்கு அருகிலேயே மீண்டும் ஒரு புதிய நூலகக் கட்டிடம் கட்ட அரசு ₹20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஏற்கனவே வசதிகள் இருக்கும் இடத்தில் மீண்டும் நூலகம் கட்டுவது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் என மனுதாரர் வாதிட்டார்.
அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம்!
மனுதாரர் தரப்பில் பாளையம் பேரூராட்சி பகுதியில் முறையான சாலை, மின்சாரம், குடிநீர் மற்றும் வடிகால் வசதிகள் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். அங்குள்ள ரேஷன் கடை கூட சொந்தக் கட்டிடம் இன்றி வாடகைக் கட்டிடத்தில்தான் இயங்குகிறது. எனவே, புதிய நூலகத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை, பழைய நூலகத்தைப் புதுப்பிக்கவோ அல்லது கிராமத்தின் அடிப்படைத் தேவைகளை மேம்படுத்தவோ பயன்படுத்த வேண்டும் என கோரப்பட்டது.
நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு
இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஒரு பகுதியில் புதிய நூலகம் கட்டுவதா அல்லது வேறு வசதிகளை செய்வதா என்பது அரசின் நிர்வாகம் மற்றும் கொள்கை முடிவு (Policy Decision) சார்ந்த விஷயம். அதில் நீதிமன்றம் தலையிட முடியாது, எனவே மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ய முடியாது எனக் கூறி, வழக்கறிஞரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
'கொள்கை முடிவு' என்றால் என்ன?
அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒரு குறிப்பிட்ட நிதியை எந்தத் திட்டத்திற்கு செலவிட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மட்டுமே உண்டு. அந்தத் திட்டத்தில் ஊழல் அல்லது சட்டமீறல் இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிடும். மாறாக, "நூலகத்திற்குப் பதில் சாலை போடுங்கள்" என்று நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிடுவது நிர்வாக செயல்பாடுகளில் தலையிடுவதாகும் என்பதால் இத்தகைய மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன.