தமிழகத்தில் நீர்நிலைகளில் மீன்பிடி குத்தகை எடுப்பதில் மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு வந்த முன்னுரிமையை ரத்து செய்து, அனைவரும் ஏலத்தில் பங்கேற்கலாம் என தமிழக அரசு பிறப்பித்த புதிய அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
தமிழக கால்நடை மற்றும் மீன்வளத்துறை 1993-இல் பிறப்பித்த அரசாணையின்படி, அணை, ஆறு, ஏரி மற்றும் குளங்களில் மீன்பிடிக்கும் குத்தகை ஒப்பந்தத்தை மீனவர் கூட்டுறவு சங்கங்கள் அல்லது பட்டியலினத்தவர்களுக்கு தான் முதலில் வழங்க வேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே இதன் நோக்கம்.
நீர்வளத்துறை செயலாளர் பிப்ரவரி 13, 2026 அன்று பிறப்பித்த புதிய அரசாணையில், மீன்பிடி குத்தகை ஏலத்தில் அனைத்து தரப்பினரும் (Open Tender) கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
“மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு”
கிருஷ்ணகிரி மாவட்டம், காவிரிப்பட்டினம் பர்வத ராஜகுல மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆர். ரங்கசாமி தாக்கல் செய்த மனுவில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலைச் செய்து வரும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை இந்தப் புதிய அரசாணை நசுக்குகிறது. வசதி படைத்தவர்கள் ஏலத்தில் பங்கேற்றால், ஏழை மீனவர்களால் அவர்களுடன் போட்டியிட முடியாது. எனவே, இந்தப் புதிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
நீதிபதி வழங்கிய உத்தரவு
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி, “1993-ஆம் ஆண்டு அரசாணையைத் தான் பின்பற்ற வேண்டும் என ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் உள்ளன, எனவே நீர்வளத்துறை செயலாளர் பிறப்பித்த புதிய அரசாணைக்கு, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இடைக்காலத் தடை விதித்து தீர்பளித்தார்.
2024-ஆம் ஆண்டு மீன்பிடி குத்தகை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இதர வழக்குகளுடன் சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என நீதிபதி ஆணையிட்டார்.
ஏன் இந்தத் தடை முக்கியமானது?
தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் உள்நாட்டு மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி வாழ்கின்றன. கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், அந்த சமூகத்தை சேர்ந்த அடித்தட்டு மக்களுக்குக் குறைந்த விலையில் குத்தகை கிடைக்கிறது.
ஏலம் அனைவருக்கும் பொதுவாக்கப்பட்டால், பெரும் முதலீடு செய்பவர்கள் ஏலத்தை எடுத்து விடுவார்கள்; இதனால் உண்மையான மீனவர்கள் தொழிலாளிகளாக மாறும் நிலை ஏற்படும். இதனை தடுக்கும் வகையிலேயே நீதிமன்றம் இந்தத் தடையை விதித்துள்ளது.