கொடைக்கானல் எம்.எம். தெரு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறிய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி ஆகியோருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “தேர்தல் நடத்தை விதிகள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தடையாக இருக்காது” என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
வழக்கின் பின்னணி
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த அலர்மேல்வள்ளி என்பவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில் கொடைக்கானல் எம்.எம். சாலையில் எனக்குச் சொந்தமான இடத்தின் அருகே, பொது இடத்தில் சிலர் சிலுவை வைத்து, கூரை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும், அங்கு ‘செல்வம்’ என்பவர் மெக்கானிக் ஷாப் நடத்தி வருவதால், எனது வீட்டிற்கு சென்று வருவதில் பெரும் இடையூறு ஏற்படுகிறது. இது தொடர்பாக 2024 ஜூன் மாதம் நீதிமன்றம் அளித்த உத்தரவில், 3 மாதத்திற்குள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமெனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகள் அதிருப்தி
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பூர்ணிமா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற போது பொதுமக்கள் தடுத்ததாக ஒரு வீடியோ ஆதாரத்தைச் சமர்ப்பித்தனர். வீடியோவைப் பார்த்த நீதிபதிகள் ஆவேசமடைந்தனர், அந்த வீடியோவில் ஒரு நபர் மாவட்ட நிர்வாகத்திற்கும், நீதிமன்றத்திற்கும் வெளிப்படையாக மிரட்டல் விடுத்ததைக் காண முடிந்தது. அதிகாரிகள் அதைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தது கவலைக்குரியது. அந்த நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீதிபதிகளின் அதிரடி உத்தரவுகள்
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் மெத்தனம் காட்டிய அதிகாரிகளுக்கு சில வாரங்களுக்கு முன்பு ஒரு விவகாரத்திற்காக மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தார். அதே அணுகுமுறையைப் பயன்படுத்தி, தற்போது ஆக்கிரமிப்புப் பகுதியைச் சுற்றி 144 தடையைப் போட்டு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு இடையூறாக இருப்பவர்களை உடனடியாகக் கைது செய்து காவலில் வைக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பது, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்குத் தடையாக அமையாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
நாளை (ஏப்ரல் 11) மதியம் 1.15 மணிக்கு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும். அதற்குள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, அது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.
கடைசி எச்சரிக்கை
“நாளைக்குள் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோருக்கு நீதிபதிகள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கியத்துவம்: நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தத் தவறும் அதிகாரிகள் மீதும், சட்டத்தை மதிக்காத நபர்கள் மீதும் நீதிமன்றம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.