கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய திருவிழாவிற்கு இயந்திரம் பொருத்தப்பட்ட ஃபைபர் இழையால் ஆன வல்லம் படகுகளில் செல்ல அனுமதி கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் உள்ள ஓலைக்குடா பகுதியை சேர்ந்த ஜெ.பிரின்சோ ரேமண்ட் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கின் மனுவில், பாரம்பரிய மீனவர்கள், தங்களின் குடும்பத்தினரோடு மோட்டார் பொருத்தப்பட்ட வல்லம் படகுகளில் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல அனுமதி அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், பாதுகாப்பு காரணங்களை கூறி வல்லத்தில் செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், மீன்பிடிக்க செல்லும்போது எந்த பாதுகாப்புடன் சொல்கிறார்களோ அதே பாதுகாப்புடனேயே தேவாலயத்துக்கு செல்வார்கள் என்பதால், அனுமதி வழங்க வேண்டும். மேலும், அரசும் மீனவ படகிலேயே கட்சத்தீவிற்கு பக்தர்கள் உள்ளிட்டோரை அழைத்துச் செல்கின்ற நிலையில், மீனவர்களுக்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல என வாதிடப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், வல்லத்தில் பயணம் செய்வது பாதுகாப்பானதா என்பதை முடிவு செய்ய தங்களுக்கு நிபுணத்துவம் இல்லை என்றும், நிபுணத்துவம் பெற்றவர்கள் முடிவு செய்து சொல்லும்போது நீங்கள் அதனை மறுத்தால், நீதிமன்றம் எப்படி முடிவு செய்ய இயலும் என கேள்வி எழுப்பியதுடன், படகின் தன்மை, கடலின் சூழல் ஆகியவற்றைப் பொறுத்தே பயணம் அமையும் என தெரிவித்தனர். நீதிமன்றம் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கும் படகு பைபர் படகு அல்ல என்றும், அது பயணத்திற்கான படகு தான் என்பதையும், சர்வதேச கடல் எல்லை போன்ற பிற விவகாரங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்தினர்.
அப்போது, மனுதாரர் தரப்பில், கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயம் மீனவர்களால் கட்டப்பட்டது என்பதால், எந்த ஆவணமும் இன்றி கச்சத்தீவிற்கு செல்ல விதிகள் அனுமதிக்கின்றன என்றும், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் 2019ஆம் ஆண்டு முதல் மரத்தால் ஆன வல்லம் படகுகளில் அரசு பக்தர்களை அழைத்துச் செல்வதாகவும், நபர் ஒருவருக்கு 2000 ருபாய் வசூலிக்கப்படுவதாவும், மீனவர்களின் பொருளாதரா சூழலில் அவ்வளவு தொகை செலுத்த இயலாது என்றும், அதனால், இயந்திரம் பொருத்தப்பட்ட ஃபைபர் இழையால் ஆன வல்லத்தில் செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆனால், அரசுத் தரப்பில், கட்டுமரம் அல்லது வல்லத்தில் செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும், அடுத்த ஆண்டு முதல் பெரிய அளவிலான மீன் பிடிக்கும் படகுகள் கச்சத்தீவு பயணத்திற்காக பயன்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவின் போது பக்தர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும் என்ற காரணத்திற்காகவே சில விதிகள் வகுக்கப்படுகின்றன என்றும், அதில் நீதிமன்றம் தலையிட இயலாது என்றும் கூறி, இயந்திரம் பொருத்தப்பட்ட ஃபைபர் இழையால் ஆன வல்லத்தில் செல்ல அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.