தெருக்களுக்கு குறிப்பிட்ட பெயரை தான் சூட்ட வேண்டும் என அரசுக்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள செட்டி தெரு என்ற பெயர் சாதியை முன்னிலைப்படுத்தும் வகையில் உள்ளதால், அதை தாய் – தந்தை கோவில் தெரு என மாற்றும்படி உத்தரவிடக் கோரி ஆர்.கே.வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சாதியை ஒழிக்க வேண்டும் என்ற மனுதாரரின் முயற்சி பாராட்டத்தக்கது என்ற போதும், அவர் விருப்பப்படி தெருவுக்கு பெயர் வைக்க வேண்டும் என கோருவதை ஏற்க முடியாது என கூறி, மனுவை தள்ளுபடி செய்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, வெங்கடேஷ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர், தெருவுக்கு குறிப்பிட்ட பெயரை சூட்ட வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், மனுதாரரின் ஆலோசனையை அரசின் சட்டபூர்வ கடமையாக கருத முடியாது என்றும் கூறி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என குறிப்பிட்டு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.