நூறு ஆண்டுகள் பழமையான கோவில் மண்டபம் வாஸ்துபடி அமைக்கப்படவில்லை என்ற நிலைப்பாடு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும் வரை காஞ்சிபுரம் சிந்தாமணி விநாயகர், சுப்பிரமணிய சாமி கோவில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளக் கூடாது என, இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம், கிருஷ்ணன் தெருவில் உள்ள அருள்மிகு சிந்தாமணி விநாயகர் மற்றும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலின் வளாகத்தை விரிவுபடுத்தவும், தங்கள் வீட்டின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளை தடுக்கும் வகையில் கோயிலை கிழக்கு நோக்கி நகர்த்தவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு தடை விதிக்கக் கோரி வசந்தா, சண்முகவேல் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். கோவில் சீரமைப்பு தொடர்பாக 10.10.2025 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தனர்.
கோயிலின் கிழக்கு திசையில் அமைந்துள்ள தங்களது வீட்டின் எல்லைக்கும், கோயிலுக்கும் இடையே 14 அடி தூரம் இருந்த நிலையில், இடிக்கப்பட்டு புனரமைக்கப்படும்போது, கோயில் சுவர் தங்கள் சொத்துக்கு முன்பாக கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், மனுதாரர்கள் தான் சாலையை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதனால் அவர்கள் புகார் கூற முடியாது என்றும் தெரிவித்தபோது, இரு தரப்பினர் முன்னிலையில் நில அளவையரால் நேரடி ஆய்வு மேற்கொள்ளவும், அதுகுறித்து காஞ்சிபுரம் வட்டாச்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், கோயிலின் அசல் புகைப்படத்தைப் பார்க்கும்போது, முன்பக்கத்தில் இருந்த ஒரு பழங்காலக் கல் மண்டபம் இருந்ததை காணலாம் என்றும், அதே மண்டபத்தை அதே முறையில் மீண்டும் உருவாக்குவதற்கான வேலைப்பாடு தெரிந்தவர்களைக் கண்டுபிடிப்பது கூட மிகவும் கடினமாக இருக்கும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
ஆனால், மண்டபம் முறையாக இல்லை மற்றும் வாஸ்துவின்படி இல்லை என்று கூறி, கோவில்களுக்கான பாரம்பரியக் குழுவின் முன் ஒரு அறிக்கையை தாக்கல் செய்து, முழு கட்டுமானத்தையும் இடித்துவிட்டு அதே கட்டமைப்புக் கல்லைப் பயன்படுத்தி மீண்டும் கட்ட பாரம்பரியக் குழுவிடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளதாக நீதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த இடிப்பு நடவடிக்கை மனசாட்சிக்கு விரோதமானது என்றும், மனுதாரர்கள் கூறிய காரணங்களை தவிர வேறு காரணங்கள் இல்லை என்றும் கருத்தியதால்தான் அறிக்கை தாக்கல் செய்யும்படி அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டதாகவும், கோயில் முறையாக இல்லை என்றும், வாஸ்து விதிகளுக்கு உட்பட்டது அல்ல என்றும் அறிக்கை இருப்பதாக கூறப்பட்டதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.
ஆனால், அந்த அறிக்கையை அரசால் தாக்கல் செய்ய முடியவில்லை, மாறாக ஸ்தபதியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க கூடுதல் அவகாசம் கேட்கப்படுவதாகவும் நீதிபதி கூறியுள்ளார்.
எனவே, நூறு ஆண்டு பழமையான கோவில் மண்டபம் வாஸ்துபடி அமையவில்லை என்பதற்கான நில அளவை அறிக்கை தாக்கல் செய்ய்யப்படும் வரை கோயிலின் புனரமைப்பு தொடர்பான எந்த பணிகளையும் செய்யக்கூடாது என உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.