கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் கட்ட தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் ரூ.46.30 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையம் அமையவுள்ள இடம், விவசாய நிலம் எனவும், அதனை வகை மாற்றம் செய்யாமல் பேருந்து நிலையம் கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குமரேசன் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், பேருந்து நிலையம் கட்ட உள்ள விவசாய நிலம், 2025ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த தகவலை மறைத்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், டிசம்பர் மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த ஜூன் மாதமே நிலம் வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அதுகுறித்த ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால் மனுதாரர் தரப்பில் கடந்த ஜூன் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வகைமாற்றம் குறித்த உத்தரவு அல்ல எனவும், பேருந்து நிலையம் கட்டுவதற்கான தடையில்லா சான்று குறித்த உத்தரவு என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வகைமாற்றம் செய்வது தொடர்பான உத்தரவை மறைத்து, வழக்கை தாக்கல் செய்துள்ளதாகக் கூறிய நீதிபதிகள், கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் கட்ட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதேபோல, ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை மீறி, பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, மனுதாரர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தும் உத்தரவிட்டனர்.