திருப்பூர் பனியன் கம்பெனிகளில் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 28 வங்கதேசத்தினருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மாற்றியமைத்த சென்னை உயர் நீதிமன்றம், அவர்களை மூன்று மாதங்களில் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பனியன் கம்பெனிகளில், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பல்லடம் காவல் நிலையத்தினர் அதிரடி சோதனை நடத்தி, முகமது சலீம், முகமது ஆஷிக், முகமது ஆரீப் அலி உள்பட 28 பேரை கைது செய்தனர்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் நீதிமன்றம், பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட சட்டரீதியான ஆவணங்கள் இன்றி, நாட்டிற்குள் நுழைந்தது தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, வங்கதேசத்தைச் சேர்ந்த 28 பேருக்கும், தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா 10,000 ரூபாயும் அபராதம் விதித்து, 2025 ஜூலை மாதம் தீர்ப்பளித்தது.
தீர்ப்பை எதிர்த்து, 28 பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், குற்றம் சாட்டப்பட்ட 28 பேரும் ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருப்பதால், ஏற்கனவே அனுபவித்த தண்டனையே போதுமானது எனக் கூறி, அவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
மேலும், அவர்களை மூன்று மாதங்களில் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.