தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் வாடகை வழக்கு
தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வரும் கட்டடத்துக்கு வாடகையை உயர்த்தியும், இரண்டு ஆண்டுகளில் கட்டடத்தை காலி செய்யவும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
சோழிங்கநல்லூரில் செயல்பட்டுவரும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்து கட்டிடத்தை ஒப்படைக்கக் கோரி உரிமையாளர்களான கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சரத்குமார், வெங்கடேஷ், சவுத்திரி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், மாதம் ரூ. 10 லட்சத்து 14 ஆயிரத்து 300 என வாடகை நிர்ணயித்து, 2022ம் ஆண்டு ஜனவரி முதல் 11 மாதங்களுக்கு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாகவும், ஒப்பந்தப்படி வாடகை வழங்காமல், பொதுப்பணித் துறை வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில், மாதம் ரூ. 6 லட்சத்து 8 ஆயிரத்து 438 வாடகையாக நிர்ணயித்து, 2022 ஜனவரி முதல் நவம்பர் வரைக்கும் ரூ. 82 லட்சத்து 16 ஆயிரத்து 824-க்கு காசோலை வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்துக்கு மாறாக வாடகை நிர்ணயித்ததால் மாதத்துக்கு ரூ. 4 லட்சம் இழப்பை சந்தித்ததாகவும், குத்தகை காலத்தை நீட்டிக்க மறுத்த நிலையில், எந்த ஒப்பந்தமும் இல்லாமல் கட்டிடத்தை பயன்படுத்தி வருவது சட்டவிரோதம் என்பதால், அதனை காலி செய்து ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கட்டடத்துக்கான வாடகையை ரூ. 6 லட்சத்திலிருந்து ரூ. 13 லட்சமாக அதிகரித்து உத்தரவிட்டார். இந்த கூடுதல் தொகை ரூ. 2.18 கோடியை 2025 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், இரண்டு ஆண்டுகளில் கட்டடத்தில் இருந்து காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி. எஸ்.ராமன், தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் கட்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும், ஆணையர் அலுவலக கட்டடத்துக்கு பிப்ரவரி 13ம் தேதி முதலமைச்சர் அடிக்கல் நாட்ட இருப்பதாகவும், 18 மாதங்களில் கட்டுமானம் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதுவரை தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, வாடகை தொகையை உயர்த்தியும், பாக்கியை வழங்கும்படியும், இரண்டு ஆண்டுகளில் கட்டிடத்தை காலி செய்யவும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைத்தனர்.