இந்திய சட்டத்தின்படி, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பொருளாதார வசதி இல்லாத மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோரைக் காப்பது ஒரு நபரின் தார்மீக மற்றும் சட்டப்பூர்வ கடமையாகும். இது குறித்த விரிவான சட்டப்பிரிவுகளை இங்கே காண்போம்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) பிரிவு 125
இந்தச் சட்டத்தின்படி, ஒரு நபர் தனது வாழ்க்கை வசதிக்கு ஏற்பக் கீழ்க்கண்டவர்களுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும்:
- மனைவி தன்னை தற்காத்துக்கொள்ள வருமானம் இல்லாத நிலையில் கணவனிடம் கோரலாம்.
- சட்டபூர்வ மனைவி மூலமாக பிறந்திருந்தாலும், வேறு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பு மூலம் பிறந்திருந்தாலும் அந்த ஆணின் மைனர் குழந்தைகள் தந்தையிடம் கோரலாம்.
- உடல் அல்லது மனநிலை பாதிப்புடைய பிள்ளைகள் மேஜர் (18 வயது) ஆன பின்பும் ஜீவனாம்சம் கோர முடியும்.
- தங்களைப் பராமரிக்க முடியாத நிலையில் உள்ள முதிய பெற்றோர்கள் மகனிடம் உரிமை கோரலாம்.
குறிப்பு: இந்த மனுவை மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவை மீறினால் ஒரு மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
மனைவி எப்போது ஜீவனாம்சம் கோர முடியாது?
- மனைவி தகுந்த காரணமின்றி கணவனுடன் வாழ மறுத்தால்.
- மனைவி வேறொருவருடன் கள்ளத் தொடர்பில் (Adultery) இருந்தால்.
- கணவனும் மனைவியும் பரஸ்பரம் சம்மதித்துப் பிரிந்து வாழும்போது.
- கணவன் தன்னுடன் வந்து வாழ அழைத்தும், நியாயமான காரணமின்றி மறுக்கும்போது. (ஆனால், கணவன் வேறொரு பெண்ணுடன் வாழ்ந்தால், மனைவி பிரிந்து வாழ்வது நியாயமான காரணமாகக் கருதப்படும்).
இந்து திருமணச் சட்டம் 1955 (பிரிவு 24 மற்றும் 25)
பிரிவு 24 (வழக்கு நடக்கும் கால பராமரிப்பு)
வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே தனது அன்றாடச் செலவுகளுக்கும், நீதிமன்றச் செலவுகளுக்கும் வருமானம் இல்லாத மனைவி ஜீவனாம்சம் கோரலாம். இத்தகைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட 60 நாட்களுக்குள் நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும்.
பிரிவு 25 (நிரந்தர ஜீவனாம்சம் – Permanent Alimony)
விவாகரத்து பெறும் நேரத்தில் சிவில் நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்யலாம். இதில் மாதந்தோறும் ஒரு தொகை அல்லது வாழ்நாள் முழுமைக்கும் சேர்த்து ஒரே தொகையாக (Lump sum) பெற்றுக்கொள்ளலாம். ஆனால், விவாகரத்திற்குப் பின் மனைவி மறுமணம் செய்து கொண்டால் இந்த உரிமையை இழப்பார்.
விவாகரத்து பெற்ற மனைவியின் உரிமை
உச்ச நீதிமன்றம் Ramesh Chander v. Veena Kaushal (1978) என்ற வழக்கில் தெளிவுபடுத்தியபடி
விவாகரத்து பெற்றுவிட்டதால் ஒரு பெண் ஜீவனாம்ச உரிமையை இழப்பதில்லை. மறுமணம் செய்யாத வரை அவர் சட்டப்படி ‘மனைவி’ என்ற உறவிலேயே கருதப்படுவார். அவர் இறக்கும் வரை அல்லது மறுமணம் செய்யும் வரை ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு.
மும்பை உயர் நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு
தீர்ப்பு ஒன்றில் மும்பை உயர் நீதிமன்றம் மிக முக்கியமான கருத்தைப் பதிவு செய்துள்ளது:
ஒரு மனைவி ‘எனக்கு ஜீவனாம்சம் வேண்டாம்’ என்று நீதிமன்றத்தில் எழுதித் கொடுத்திருந்தாலும் அல்லது அத்தகைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும், அது சட்டப்படி செல்லாது. ஒரு பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய வாழ்வாதார உரிமையை விட்டு கொடுக்க சட்டத்தில் இடமில்லை. அவர் எப்போது வேண்டுமானாலும் தனது ஜீவனாம்சத் தொகையைப் பெற நீதிமன்றத்தை அணுகலாம்.
பின்குறிப்பு : முன்பு சொன்னதுபோல் அவர் மறுமணம் செய்யாதிருத்தல் வேண்டும்.
நன்றி
வெ.கண்ணன்
வழக்கறிஞர், மதுரை உயர்நீதிமன்றம்