ஏற்கனவே திருமணமான ஒரு ஆண், மற்றொரு வயது வந்த பெண்ணுடன் பரஸ்பர சம்மதத்துடன் இணைந்து வாழ்வது கிரிமினல் குற்றமாகாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இத்தம்பதியினருக்குப் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டதோடு, பெண்ணின் குடும்பத்தினருக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வழக்கின் பின்னணி
உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனாமிகா (18) மற்றும் நெத்ரபால் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் நெத்ரபால் ஏற்கனவே திருமணமானவர் என்பதால், அவர் அனாமிகாவை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாகப் பெண்ணின் குடும்பத்தினர் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 87-ன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தங்களுக்குப் பெண்ணின் குடும்பத்தினரால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி இருவரும் நீதிமன்றத்தை நாடினர்.
நீதிபதிகள் வழங்கிய அதிரடி உத்தரவுகள்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜே.ஜே. முனீர் மற்றும் தருண் சக்சேனா கடத்தல் வழக்கில் மனுதாரர்கள் இருவரையும் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தனர். இத்தம்பதியினரின் பாதுகாப்பிற்கு ஷாஜஹான்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) தனிப்பட்ட முறையில் பொறுப்பாவார். அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். பெண்ணின் குடும்பத்தினர் இவர்களின் வீட்டிற்குள் நுழையவோ அல்லது போன், சமூக வலைதளங்கள் மூலம் அவர்களைத் தொடர்பு கொள்ளவோ கூடாது என உத்தரவிட்டனர்.
சட்ட ரீதியான விளக்கம்
நீதிமன்றம் தனது தீர்ப்பில் சமூகம் ஒரு விஷயத்தைத் தவறாகப் பார்ப்பதற்கும் (Social Morality), சட்டம் அதைத் தண்டிப்பதற்கும் (Law) வித்தியாசம் உள்ளது. வயது வந்த இருவர் தங்களின் விருப்பப்படி இணைந்து வாழ்வது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள வாழ்வுரிமை மற்றும் தனிமனித சுதந்திரம் ஆகும். ஒரு நபர் திருமணமானவராக இருந்தாலும், அவர் மற்றொரு வயது வந்தவருடன் சம்மதத்துடன் வாழ்வது கிரிமினல் குற்றமாகாது என்பதை நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
அடுத்த கட்ட நடவடிக்கை
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 8, 2026 அன்று நடைபெற உள்ளது. அதுவரை தம்பதியினருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் கைது தடையுத்தரவு அமலில் இருக்கும்.
திருமணமானவர் லிவ்-இன் உறவில் இருந்தால் Adultery ஆகாதா?
முன்பு இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) கீழ் 497-வது பிரிவு Adultery என்பதை ஒரு கிரிமினல் குற்றமாகக் கருதியது. ஆனால், 2018-ல் உச்ச நீதிமன்றம் இதனை ரத்து செய்தது. இதன்படி, திருமணமானவர் வேறொருவருடன் உறவில் இருப்பது ஒரு சிவில் குற்றமாக கருதப்பட்டு விவாகரத்து பெறக் காரணமாக அமையுமே தவிர, அதற்காக அவரைப் சிறையில் அடைக்க முடியாது. அதனை அடிப்படையாகக் கொண்டே அலகாபாத் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.