தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக நடத்தப்படும் வரும் ஆரம்பகட்ட விசாரணை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2021 மற்றும் 20 23ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 28 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் எனப்படும் மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு ரூ. 397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு எதிராக சந்தேகப்படும்படியான ஆதாரங்கள் உள்ளதால், இந்த முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதே கோரிக்கையுடன் அதிமுக நிர்வாகி சரவணன் என்பவர் உள்பட மேலும் இருவர் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஒரே விலையை குறிப்பிட்டிருந்த 30 ஒப்பந்ததாரர்களுக்கு அதிக விலைக்கு இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 2023ஆம் ஆண்டு புகார் அளித்து நான்கு மாதங்கள் கடந்த பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக, அறப்போர் இயக்கம் தரப்பில் வாதிடப்பட்டது.
அரசுத் தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசின் ஒப்புதலைப் பெற்று, லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தி வருவதாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும், 1987ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைப்படி தான் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன என்றும், ஒப்பந்ததாரர்கள் பல ஆண்டுகளாக ஒரே விலையை தான் குறிப்பிடுகின்றனர் என்றும், இதனால் அரசும் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தங்களை வழங்காவிட்டால், தமிழகம் முழுவதும் 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பயன்பாட்டில் உள்ள டிரான்ஸ்பார்மர்களை மாற்ற முடியாது எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இதுபோன்ற முறைகேடு குறித்த வழக்குகளில் ஆரம்பகட்ட விசாரணை தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி செயல்பட்டிருந்தால் இந்த வழக்குகள் வந்திருக்காது என்றும், எல்லா வழக்குகளிலும் ஆரம்பகட்ட விசாரணையை நடத்தினால், முடிவு எட்ட முடியாது எனத் தெரிவித்தனர்.
பின்னர், வழக்குகள் தொடர்பாக ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், டெண்டர் ஒதுக்கீடு செய்தது தொடர்பான ஆவணங்களையும், ஆரம்பகட்ட விசாரணை குறித்த ஆவணங்களையும் தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.