7,000 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ள நிலையில், நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் எடுக்க வெறும் 400 பேர் மட்டுமே பதிவு செய்திருப்பது கவலை அளிப்பதாக குறிப்பிட்ட நீதிபதி, இது குறித்து கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
வழக்கின் பின்னணி
நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் (ஏறத்தாழ 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்) பொதுமக்களிடம் வங்கிகளை விட மிக அதிகமான வட்டி விகிதம் வழங்கப்படும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு முதலீடு செய்த தொகை பல மடங்கு உயர்த்தி வழங்கப்படும். முதலீடு செய்யும் பணத்திற்கு ஈடாக நிலங்கள் (Plots) ஒதுக்கீடு செய்யப்படும் அல்லது அதன் மதிப்பு உயரும்போது பெரும் லாபம் கிடைக்கும் என விளம்பரப்படுத்தினர். இந்த வாக்குறுதிகளை நம்பி, தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சுமார் 7,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர்.
முதலீடு செய்த காலம் முடிந்தும், அசல் தொகையையோ அல்லது வட்டியையோ அந்நிறுவனம் திருப்பி வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவில் (EOW) புகார் அளித்தனர்.
நீதிமன்றத்தின் கவலை மற்றும் வினாக்கள்
இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பரத சக்கரவர்த்தி, மின்னணு ஏலத்தில் பங்கேற்க இதுவரை எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர் எனக் கேள்வி எழுப்பினார். 400-க்கும் அதிகமானோர் மட்டுமே பதிவு செய்துள்ளதாகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு மனையிடங்களை விற்பனை செய்ய நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இவ்வளவு குறைவான பதிவுகள் வருவது வருத்தமளிப்பதாக நீதிபதி வருத்தம் தெரிவித்தார்.
இது தொடர்பாகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை இன்னும் கூடுதலாக விளம்பரம் செய்ய வேண்டும் என்பதையே இது காட்டுகிறது எனவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
அரசு தரப்பு விளக்கம் மற்றும் ஏல விவரங்கள்
அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் நியோமேக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான DTCP அங்கீகாரம் பெற்ற மனையிடங்கள், MSTC வலைத்தளம் மூலம் இன்று முதல் (மார்ச் 17) ஏலம் விடப்படவுள்ளன.
ஏலம் தொடர்பான சந்தேகங்களுக்கு மார்ச் 23, 24 தேதிகளில் பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தை அணுகலாம். இதற்கான பிரத்யேக அலைபேசி எண்களும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.
சொத்துக்களின் விவரங்களை அறிய விரும்புவோர் நேரில் அல்லது தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொள்ளப் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு
இந்த விளக்கங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, ஏலம் தொடர்பாக பொதுமக்களிடையே இன்னும் பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தினார். மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் மார்ச் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
சொத்து ஏலம் மற்றும் முதலீட்டாளர் இழப்பீடு என்றால் என்ன?
நிதி நிறுவன மோசடி வழக்குகளில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்க, அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான சொத்துக்களை நீதிமன்ற மேற்பார்வையில் ஏலம் விடுவது வழக்கம். இந்த ஏலத்தில் கிடைக்கும் தொகையைக் கொண்டு முதலீட்டாளர்களின் இழப்பு ஈடு செய்யப்படும். அதிக அளவில் ஏலம் எடுப்பவர்கள் பங்கேற்றால் மட்டுமே சொத்துக்களுக்குச் சரியான விலை கிடைக்கும் என்பதால், இதற்கான விழிப்புணர்வை நீதிமன்றம் வலியுறுத்துகிறது.