ஆராய்ச்சி மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரத்தில், காவல்துறையினருக்கு எதிராக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த ஒழுங்கு நடவடிக்கை மற்றும் இழப்பீடு உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சம்பவத்தின் பின்னணி
2018-ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பயணித்த விமானத்தில், “பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என லூயிஸ் சோபியா கோஷமிட்டார். இது தொடர்பாக தூத்துக்குடி புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து சோபியாவை கைது செய்தனர். இதனை எதிர்த்து அவரது தந்தை மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.
மனித உரிமை ஆணையத்தின் முந்தைய உத்தரவு
இந்த புகாரை விசாரித்த ஆணையம், சோபியாவின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக முடிவு செய்து, பாதிக்கப்பட்ட சோபியாவுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அந்த தொகையை சம்பந்தப்பட்ட போலீசாரிடமே வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. மேலும், 0சம்பந்தப்பட்ட போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
மனித உரிமை ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்துப் போலீசார் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் ஷமீம் அஹமது அடங்கிய அமர்வு, ஒரு சம்பவம் நடக்கும் இடத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறையினர் எடுக்கும் உடனடி முடிவுகளை குறை கூற முடியாது.
விசாரணை நடக்கும் முன்பே மனித உரிமை ஆணையம் இணையாக ஒரு விசாரணையை நடத்தி முன்முடிவுக்கு வர முடியாது எனவும், மனித உரிமை ஆணையம் தனது அதிகார வரம்பை மீறி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தது.
மேலும், சோபியாவுக்கு இழப்பீடு வழங்கவும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் பிறப்பிக்கப்பட்ட மனித உரிமை ஆணையத்தின் 2022-ஆம் ஆண்டு உத்தரவு ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது
காவல்துறையின் அதிகாரம் என்றால் என்ன?
பொது இடங்களில் அமைதிக்குப் பங்கம் ஏற்படும் போது அல்லது ஒரு புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் போது, காவல்துறையினர் எடுக்கும் முடிவுகள் சட்டத்திற்கு உட்பட்டதா என்பதை புலன் விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணை மூலமே உறுதி செய்ய முடியும். அந்த நடைமுறை முடிவதற்கு முன்பே மனித உரிமை மீறல் என முத்திரை குத்த முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு விளக்குகிறது.