3500 ஆண்டுகள் பழமையான என் தமிழ் மொழியின் தொன்மை, செருக்கு காரணமாகவே, மற்றவர்கள் ஒரு மொழியை என் மீது திணித்தால் என்றுமே ஏற்கமாட்டேன் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் உணர்ச்சிபொங்க சூளுரைத்துள்ளார்.
சீர்மிகு சட்டப் பள்ளியின் மாதிரி வழக்காடு மன்றம் மற்றும் ராகேஷ் சட்ட அறக்கட்டளை இணைந்து நடத்தும் மூன்றாவது தேசிய குற்றவியல் விசாரணை வழக்குரை போட்டி சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
மாணவர்களின் தமிழ் வழக்காடு திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன், கீழமை நீதிமன்றங்களில் வழக்குகள் பெரும்பாலும் தமிழில் நடைபெற்று வருவதை மையமாக கொண்டு நடத்தப்பட்ட வழக்குரை போட்டியின் இறுதிச்சுற்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடைபெற்றது.
இறுதிச்சுற்று போட்டிக்கு பிறகான நிறைவு விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், சுந்தர் மோகன், ஓய்வுபெற்ற நீதிபதி வி. பாரதிதாசன், ராகேஷ் சட்ட அறக்கட்டளை தலைவரும், நாடாளுமன்ற திமுக உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ, மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், மாதிரி வழக்காடு மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வே. பாலாஜி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பலகலைக்கழகத்தின் பதிவாளர் கௌரி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆற்றிய நிறைவுரை :
மனிதனின் கண்டுபிடிப்புகளில் ஆகச்சிறந்தவையாக குண்டூசி, சக்கரம், மின்சாரம், மொழி ஆகியவை உள்ளன. முதலிடத்தில் உள்ள மொழி என்பது தனி மனிதன் கண்டுபிடித்தது இல்லை. ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த மாபெரும் கண்டுபிடிப்பு. உலகம் முழுவதும் பேசப்படும் 6000 மொழிகளில், அவற்றுக்கான எழுத்துக்களை கொண்டவை 200ஐ கூட தாண்டவில்லை. அவற்றில் 120 – 130 மொழிகளுக்கு சொந்த எழுத்து வடிவம் கிடையாது.
1000 ஆண்டுகளை கடந்த மொழிகள் 10 மட்டுமே இருக்கும். அப்படி ஆயிரம் ஆண்டுகளை தாண்டாத ஆங்கிலத்தை பேசி பெருமைபடுத்துகிறோம். 2000 ஆண்டுகளை கடந்தவை கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சமஸ்கிருதம், சீனம் மற்றும் அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழி. இதில் சமஸ்கிருதம் உள்ளிட்ட 4 மொழிகள் பேச்சு வழக்கில் இல்லை. சமஸ்கிருதம் என்பது மனிதன் கடவுளிடம் பேசும் ஒரு மொழி. அதாவது சாமியும் சாமியும் பேசிக்கொள்ளும் அந்த மொழி நடைமுறையில் பேச்சு வழக்கில் இல்லை.
2000 ஆண்டுகளை கடந்து இன்றும் பேச்சு வழக்கில் இருப்பவை சீன மொழியும், தமிழ் மொழியும் தான் என சொல்லிக்கொண்டு, நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், கீழடி அகழாய்வில் 3500 ஆண்டுகளை தாண்டி நிற்கின்ற ஒரே மொழி தமிழ் தான் என நிரூபணமாகியுள்ளது. ஒரு மொழியில் இலக்கணம் உரைநடையில் இருக்கும். ஆனால் தமிழில் மட்டுமே இலக்கணமும் கவிதை வடிவில் இருக்கும். தலைவன் தலைவியிடம் காதலை வெளிப்படுததும்போது, மரத்தை சகோதரியாக பார்த்தது தமிழ் இலக்கணம், ஆனால் இப்போது மனிதர்கள் மரமாக செல்கிறார்கள்.
உலகின் மூலைமூடுக்குகளில் மதம், சாதி, இனம் ஆகியவற்றின் பெயரால் பதற்றம் நிறைந்த சூழலை மனிதன் செயற்கையாக உருவாக்கிக்கொண்டிருக்கும் நிலையில் நாம் விழித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
திருக்குறள் எந்த அரசனையும் தூக்கிப்பிடிக்கவில்லை, இறைவனை உயர்த்திப் பிடிக்கவில்லை, எந்த மதத்துக்கும் சார்பாக இல்லாமல் எந்த சமய சாயத்தையும் தன் மீது பூசிக்கொள்ளாமல் அகில உலக மாந்தர் குலத்தின் செழுமைமிக்க பொதுமுறை நூலாக இருந்து, ஒவ்வொரு அறக்ககூற்றையும் நுட்பமாக சொல்ல முடிந்தது என்றால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழனின் வளர்ச்சியை மனதில் கொள்ளவேண்டியது மிகவும் முக்கியம். இந்த மொழியை பேசுவதும் பாதுகாப்பதும் நாம் அனைவரின் கடமை.
சமீபத்தில் பராசக்தி படத்தை மகனுடன் சென்று பார்த்துவிட்டு வந்தபிறகு மொழி போராட்டம் தமிழ்நாட்டில் நடந்தது தெரியுமா என கேட்டேன். தெரியாது என மகன் அளித்த பதிலால் நான் ரொம்ப அவமானப்பட்டேன். மொழிப் போராட்டத்தை சொல்லிக்கொடுக்காமல் என் கடமையிலிருந்து தவறியதாக கருதிக்கொண்டேன்.
மொழிப் போராட்டத்தை நாம் அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். எங்கள் பள்ளிபருவத்தில் மொழிப் போராட்டத்தின் அதிர்வுகள் இருந்தன. அப்போதெல்லாம், பள்ளிகளில் இரண்டாவது மொழி தமிழ் என்பது இயல்பு. திரைப்படங்களில் கூட தமிழ் வசனங்கள் தெறிக்கும்.
“கொங்குதேர் வாழ்க்கை” என்ற குறுந்தொகை பாடலை நான் திரைப்படத்திலிருந்து கற்றேன், அதற்கான சந்தர்ப்பம் இருந்தது.
உயிர் எழுத்துகளையும், மெய் எழுத்துக்களையும், வல்லின, மெல்லின, இடையினத்தை “ஊமைப் பெண்ணல்லவோ” போன்ற திரைப்பாடல்கள் மூலம் கற்றுக்கொடுத்தன.
“மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் ” போன்ற திரைப்பாடல்கள் கம்யூனிசம் உள்ளிட்ட சித்தாந்தங்களை அறிந்தக்கொள்ள உதவின.
காலங்கள் மாறின காட்சிகள் மாறின. மதிப்பெண்கள் எடுப்பது முக்கியம் என்ற காலகட்டம் வந்தபோது, தமிழ் படித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் இந்தி, பிரெஞ்ச், சமஸ்கிருதம் என மாறினார்கள். அது எவ்வளவு பெரிய தப்பு என்பது இன்று தெரிகிறது.
மொழியில் முக்கியம் மதிப்பெண் எடுப்பதில்லை, மொழி நம் மூச்சு, நம் உயிர், நம் அடையாளம். மதிப்பெண் முக்கியமாக போனதால் பள்ளிப்பாடத்திட்டத்தில் வேறு சில மொழிகள் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது. அதனால் மாணவர்களின் தாக்கம் குறைந்து இந்த நிலைமைக்கு வந்துள்ளோம். அதனால் தமிழ் எல்லாவற்றிலும் ஓரடி பின்னே வைத்துள்ளது.
இதற்காக நாம் அடுத்த வேள்வி நடத்த வேண்டிய முக்கிய காலகட்டம் இது. மொழியினை பற்றி பெருமை கொள்ளாது தமிழ்நாட்டில் வாழ்வது தமிழுக்கு இழுக்கு. ஆங்கிலம் தெரியாமல் தமிழ்நாட்டை தாண்ட முடியாது என எங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் தமிழன் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை மாறாக விரும்பி படிக்கிறான்.
என் மொழியின் தொன்மை, செருக்கு காரணமாகவே, மற்றவர்கள் ஒரு மொழியை என் மீது திணித்தால் அதை நான் என்றுமே ஏற்கமாட்டேன்.
நான் தமிழன் என தலைநிமிர்ந்து சொல். மொழிக்கு ஒரு இழுக்கு வரும்போது உன் குரல் உயர வேண்டும். எந்த கட்டத்திலும் இந்த தமிழ் மொழியின் அருமையை தூக்கிப்பிடிப்பது நம் கடமை என்பதை மறவாதீர்கள்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.