தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பூந்தமல்லி தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் ஆர். பிரகாசம் (எ) குட்டி மீது பதியப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில், அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தவெக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் பூந்தமல்லி (தனி) தொகுதிக்கு ஆர். பிரகாசம் அறிவிக்கப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தவெக மகளிர் அணி நிர்வாகி ஒருவர், பிரகாசம் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார். கடந்த ஜூன் 2024-ல் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, பிரகாசம் தன்னிடம் ஆபாசமாகப் பேசி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. புகாரைத் தொடர்ந்து திருவள்ளூர் நகரப் போலீசார் பிரகாசம் மீது ஆபாசமாகப் பேசுதல், பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
நீதிமன்றத்தில் நடந்த காரசார வாதம்
இதனை எதிர்த்து பிரகாசம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில், தேர்தல் நேரத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் இந்தப் பொய்ப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கட்சிப் பதவி கிடைக்காத ஆத்திரத்தில், மாற்று அரசியல் கட்சியினரின் (திமுக) தூண்டுதலின் பேரில் இந்தத் திட்டமிட்ட சதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தைத் தடுக்கவே இந்த நடவடிக்கை, என வாதிடப்பட்டது.
பெண் நிர்வாகி அளித்த புகாரில் பாலியல் ரீதியான தீவிரக் குற்றச்சாட்டுகள் உள்ளன. தலைமறைவாக உள்ள இவருக்கு முன்ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது,” என அரசுத் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
உயர் நீதிமன்றத்தின் நிபந்தனை உத்தரவு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிரகாசம் குறிப்பிட்ட நாட்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் காவல்துறையின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் மற்றும் சாட்சிகளை அச்சுறுத்தக் கூடாது எனகூறி நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் மூலம் காவல்துறையினர் அவரை உடனடியாக கைது செய்ய முடியாது என்பதால், அவர் தனது தேர்தல் பணிகளைத் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது.