மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட புதிய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசாணையில், மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தது.
அந்த புதிய அரசாணையின் படி 25 சதவீத பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடியாக நியமனம் செய்யப்படும் என்றும், மீதமுள்ள 75 சதவீத பணியிடங்கள் நூலகத் துறையில் பணியாற்றும் முதல் நிலை நூலகர்கள் அல்லது அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பணியாற்றும் அலுவலர்களைக் கொண்டு (பணிமாறுதல் அல்லது அயல் பணி அடிப்படையில்) நிரப்பப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், இந்த அரசாணையை எதிர்த்து உமா மகேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
அதில், நேரடி நியமனத்திற்கான விழுக்காட்டைக் குறைப்பது தகுதியுள்ள இளைஞர்களின் வாய்ப்பைப் பறிக்கும் செயல்; பதவி உயர்வு அடுக்குமுறையை சீர்குலைக்கும்; ஏற்கனவே தற்காலிகமாக பணியில் உள்ளவர்களை நிரந்தரப்படுத்தும் நோக்கத்தில் இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறி, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பில், “தற்போது 38 மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்களில் 32 பணியிடங்கள் காலியாக உள்ளதால், தகுதியான நபர்களை விரைவாக நியமிக்க அனைத்து வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டு விதிமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டததாகவும், விரைவில் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என உறுதியளித்தார்.
அதையடுத்து நீதிபதிகள், “ஒரு பணியிடத்திற்கான தகுதிகள் மற்றும் நியமன முறைகளை முடிவு செய்வது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்தனர். அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்ற நவீன நூலகங்களில் அனுபவம் பெற்றவர்களை மாவட்ட நூலக அலுவலர்களாக நியமிப்பது நிர்வாக ரீதியாகச் சிறப்பானது என்ற அரசின் வாதம் ஏற்கத்தக்கது என்றும் குறிப்பித்துள்ளனர்.
அதனடிப்படையில், இந்த அரசாணை அரசியல் சாசனத்திற்கு எதிராகவோ அல்லது தன்னிச்சையாகவோ எடுக்கப்பட்ட முடிவு என்று கருத முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
CORAM : THE HONOURABLE DR.JUSTICE G. JAYACHANDRAN and THE HONOURABLE MR.JUSTICE K.K. RAMAKRISHNAN
W.P.(MD)No.1281 of 2026
V.Umamahesh
Vs.
1.The Secretary to his Excellency Governor of Tamilnadu and other
PRONOUNCED ON : 29.01.2026
Judgement Copy : https://mhc.tn.gov.in/judis/index.php/casestatus/viewpdf/2058617