சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காவல் துறையினரின் காவலில் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஆகாஷ் என்பவரின் உடல் விவகாரத்தில், அவரது பெற்றோர் இன்று மாலை 5 மணிக்குள் உடலைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
மானாமதுரை காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது ஆகாஷ் உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது தந்தை ராஜேஷ்கண்ணன் மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,
- உயிரிழந்த ஆகாஷின் குடும்பத்திற்கு ₹50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
- ஆகாஷின் மரணத்திற்கு காரணமான சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது எஸ்சி/எஸ்டி (SC/ST) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி, விசாரணை அதிகாரி விரைவாக விசாரணையை முடித்து, சட்டப்படி உரிய நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
நீதிபதியின் அதிரடி உத்தரவு
இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி விக்டோரியா கௌரி
“மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இருப்பினும், உயிரிழந்த ஆகாஷின் உடலை இன்னும் அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொள்ளாமல் இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. ஒரு மனிதரின் உடலுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும்.”
என்று தெரிவித்தார். மேலும், “ஆகாஷின் பெற்றோர் இன்று மாலை 5 மணிக்குள் உடலைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒருவேளை அவர்கள் உடலைப் பெற்றுக்கொள்ளத் தவறினால், காவல்துறையே உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கலாம்” என உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி நாளைக்கு (ஜூன் 16) ஒத்திவைத்துள்ளார்.