திருப்பரங்குன்றம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், துணை ஆணையர், கோவில் செயல் அலுவலர்
ராம ரவிக்குமார், அரச பாண்டி ஆகியோர் தொடர்ந்த வழக்கில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் டிசம்பர் 1ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில் டிசம்பர் 3ல் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் மனுதாரர்கள் மலைக்கு நேரில் சென்று தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.
அதன்படி தீபம் ஏற்ற மனுதாரர்கள் சென்றபோது, திருப்பரங்குன்றத்தில் 144 தடையாணை அமலில் இருப்பதாக கூறி திருப்பி அனுப்பப்பட்டனர். 144 தடையாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதையடுத்து மதுரை ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், காவல் துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தொடர் நீதிமன்ற அவமதிப்பு புரிந்ததாக கூறி மதுரை ஆட்சியர் பிரவீன்குமார், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் யக்ன நாராயணன், துணை காவல் ஆணையர் இனிகோ திவ்யன், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி அரச பாண்டி தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் அவமதிப்பு செய்ததற்காக அகில இந்திய பணிகளில் (ஐஏஎஸ், ஐபிஎஸ்) உள்ள அதிகாரிகள் மீது அகில இந்திய பணி விதிகள் (நடத்தை) 1968ல் அடிப்படையில் துறைரீதியான மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணையர் இனிகோ திவ்யன், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் நேரில் ஆஜராகினர். மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், கோவில் செயல் அலுவலர் தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மாவட்ட ஆட்சியரின் பதில் மனுவில், இந்து அமைப்புகள், சார்பில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமென்றும் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவை மீற வேண்டுமென்ற எண்ணத்தில் எதையும் செய்யவில்லை என்றும், காவல்துறையினரை தவறான வார்த்தைகளில் திட்டி, பேரிகார்டுகளை தூக்கி எறிந்து பிரச்சனை செய்ததால், பக்தர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே அப்போதிருந்த சூழலை கருத்தில் கொண்டே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், பொது அமைதியை கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கூடாது என்பதோ, மதிக்கக் கூடாது என்பதோ தனது நோக்கமல்ல என்றும், விரும்பத்தகாத செயல்கள் நடந்துவிடக் கூடாது என்பதே நோக்கமாக இருந்ததாகவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
காவல் ஆணையர் தரப்பிலும் இந்த போல நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனுதாக்கல் செய்யப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவற்றை ஏற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும், நீதிமன்றம் கோரும் அனைத்து பதில் மனு, பிரமாணப்பத்திரத்தையும் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி,மலை மேலே அனுமதிக்க முடியாது என்றும், அதனால் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம் என்றும் காவல்துறையினர் சொன்னதாக செய்தி வந்ததாக குறிப்பிட்டபோது, அரசுத் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு, அவ்வாறு சொன்னவர்கள் பிரச்சினையை எதிர்கொள்ளட்டும் என்றும், உண்மையாக அலுவலர், அவ்வாறு சொல்லியிருந்தால், அவர் வெளிப்படையாக மன்னிப்பு கோரட்டும்” என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜரான அன்று, வழக்கிற்கு வந்தது போல இல்லாமல், டூத்பேஸ்ட் விளம்பரத்திற்கு வருவதைப் போல புன்னகையுடன் இருந்ததாக செய்திதாள்களில் படங்கள் வந்ததை குறிப்பிட்டார். காவல் ஆணையர், துணை ஆணையர், செயல் அலுவலரைக் கூட மன்னிக்கலாம் என்று கூறிய நீதிபதி சுவாமிநாதன், ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆட்சியர் எப்படி 144 தடை உத்தரவை பிறப்பிக்கலாம்? அவருக்கு எவ்வளவு தைரியம்? என கேள்வி எழுப்பினார்.
அரசுத் தரப்பில் ஏறத்தாழ 10 ஆண்டுகளாக உழைத்து இந்நிலைக்கு வந்திருக்கும், இளைஞரின் வாழ்வை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், தவறுகள் நிகழ்ந்திருக்கலாம், ஆனால் நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தரப்பில் கூடுதலாக பதில் மனுவைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அதையேற்ற நீதிபதி, மாவட்ட ஆட்சியர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனியாகவும், காவல் ஆணையர், துணை ஆணையர், கோவில் செயல் அலுவலர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனியாகவும் பிரித்து உத்தரவிட்டார். மேலும் அடுத்த விசாரணையின்போது ஆட்சியர் மட்டும் ஆஜராக வேண்டும் என்றும், காவல் ஆணையர், துணை ஆணையர், செயல் அலுவலத் ஆஜராக தேவையில்லை என உத்தரவிட்டு வழக்கை மார்ச் 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.