அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான 98 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி பெறுவதில் ஏற்பட்ட காலதாமதத்துக்கான காரணத்தை விளக்கி அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக பொதுத்துறை செயலாளர், ஊழல் கண்காணிப்பு ஆணையர், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கூர், விஜிலன்ஸ் கமிஷனர் மணிவாசன், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அபய்குமார் சிங் ஆகியோர் தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட காலதாமதம் வேண்டுமென்றே ஏற்பட்டதல்ல எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், வழக்கு தொடர ஒப்புதல் கோரி மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதமும், நினைவூட்டல் கடிதங்களும் நிலுவையில் இருப்பதாகவும், பொதுத்துறை வேகமாக செயல்பட்டிருக்க வேண்டும் என்றும், எந்த அதிகாரியையும் பாதுகாக்கவில்லை நினைக்கவில்லை என்றும், அவர்கள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை பிப்ரவரி 20ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.