சிவகங்கை மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், தமிழ்நாடு காவல்துறையினர் தாக்கியதால்தான் மரணமடைந்துள்ளார் என உறுதியாகியுள்ளது என்றும், வழக்கு பதியப்பட்டுள்ள 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது என்றும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமாரை கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதா என்பவர் அளித்த புகாரில் தனிப்படைக் காவலர்கள் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் ஜூன் 28ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் தனிப்படையை சேர்ந்த காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகியோர் 5 பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் 5 பேர் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு காவல் துறையினர் தாக்கியதால்தான் அஜீத்குமார் மரணமடைந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது; வழக்கு பதியப்பட்டுள்ள டிஎஸ்பி, ஆய்வாளர், தலைமை காவலர், தனிப்படை காவலர்கள் என 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நகை திருட்டு புகார் அளிக்கப்பட்டது உண்மையா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது, கொலையான அஜித்குமார் மீதான புகார் உண்மையில்லை என்றும் அறிக்கை தயாராகி வருவதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஒன்றுமே இல்லாத விசயத்திற்காக காவல்துறையினர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ள நிலையில், புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? என சிபிஐ தரப்பில் கேள்வி எழுப்பினார். மேலும், முன்விரோதம் ஏதேனும் இருந்ததா எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். முன்விரோதம் எதுவும் இல்லை என்றும், டிஎஸ்பி விசாரிக்குமாறு கூறியதால் காவல்துறையினர் இவ்வாறு செய்துள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதி ஸ்ரீமதி, யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும்; ஒன்றுமே இல்லாத விசயத்திற்காக ஒருவரை காவல்துறையினர் அடித்து இவ்வாறு செய்திருப்பதை நினைத்தால் மனது பதறுகிறது; எனவே காவல்துறையினருக்கு பாடம் புகட்டுவோம் என குறிப்பிட்டு வழக்கை, பிப்ரவரி 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.