பொது நல வழக்கு தொடர்ந்ததற்காக கணவரின் படத்துடன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி மனைவி தாக்கல் செய்த வழக்கில் மதுரை மாநகர காவல் ஆணையர், சைபர் குற்றப்பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை அண்ணா நகரை சேர்ந்த கல்லூரி பேராசிரியை கயல்விழி தாக்கல் செய்துள்ள மனுவில், வழக்கறிஞராக பணியாற்றிய கணவர் மாணகிரி செல்வக்குமார், தேவேந்திர குல சமூகத்தை சேர்ந்த மக்களை பட்டியல் அட்டவனையில் இருந்து நீக்கம் செய்வது குறித்து முடிவு எடுக்கும் பட்சத்தில், அந்த சமூக மக்களின் உண்மையான கருத்தை நேரடி கள ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும் என பொது நல மனு தாக்கல் செய்திருந்தாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் அரசியல் செய்து ஆதாயம் காண நினைக்கும் சிலர் என் மீதும், என் கணவர் மீதும் சமூக வலைதளங்களில் மிகவும் அறுவுறுத்தக்க வகையில் அவதூறு பரப்புவதுடன், என் கணவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியும், என்னை கொலை வழக்கு மற்றும் குண்டுவீச்சு வழக்குகளில் தொடர்புபடுத்தியும் அவதூறான கருத்துக்களை பரப்பி, கொலை மிரட்டல் விடுத்துவருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சைபர் குற்றப் பிரிவில் புகார் அளித்து எவ்வித நடவடிக்கையும் இல்லை என்பதால், தங்கள் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, “மனுதாரரின் புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மதுரை மாநகர காவல் ஆணையர், சைபர் குற்றப் பிரிவினர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.