கொலை வழக்கில் 9 பேர் விடுதலை செய்த மாவட்ட நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து, ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருவான்மியூரை சேர்ந்த ஏழுமலை என்பவர் முன்விரோதம் காரணமாக ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட 7வது கூடுதல் அமர்வு நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அனைவரையும் விடுதலை செய்து, 2017ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
தீர்ப்பை எதிர்த்து காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் எம். ஜோதிராமன் அமர்வு, கொலையை நேரில் பார்த்த எழுமலையின் மனைவி மற்றும் பிள்ளைகளின் வாக்குமூலங்கள் மிகவும் நம்பகத்தன்மையுடன் உள்ளன. சிறிய முரண்பாடுகளை காரணம் காட்டி, திட்டமிட்டு கொலை செய்த சட்டவிரோத கும்பலை விடுவிக்க முடியாது என்று கூறி, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் 5 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 9 பேரை குற்றவாளிகளாக அறிவித்த உயர் நீதிமன்றம், நேரில் ஆஜராகியிருந்த ஸ்டீபன்ராஜ் மற்றும் சந்துரு ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
மீதமுள்ள சரவணன், அப்பு, குருமூர்த்தி உள்ளிட்ட 7 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டிருந்த இரு பெண்கள் உள்பட ஏழு பேரும், நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களிடம் தண்டனை விவரம் குறித்து கேட்ட போது, தங்களுக்கு எதிராக பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.
இதையடுத்து, ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்த நீதிபதிகள், தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து, அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.