நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தாம்பரம் தாலுகா வட்டார வளர்ச்சி அதிகாரிக்கும், தாம்பரம் மற்றும் விருத்தாசலம் வட்டாட்சியர்களுக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாம்பரம் தாலுகா, கோவிலேஞ்சேரி கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், தாம்பரம் வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் தாம்பரம் தாசில்தார் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சி,எம். டி.ஏ. உறுப்பினர் செயலருக்கு எந்தவித தொடர்பும் இந்த வழக்கில் இல்லை என்றும், மற்ற அதிகாரிகள் தரப்பில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதிமன்றம் 12 வாரங்கள் அவகாசம் வழங்கிய நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடோ, மறு ஆய்வு மனுவோ தாக்கல் செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, மக்களின் வரிப் பணத்தில் ஊதியம் பெறும் அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை உதறி தள்ளமுடியாது எச்சரித்தனர்.
அதன்பின்னர், பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலரையும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரையும் வழக்கில் இருந்து விடுவித்த நீதிபதிகள், தாம்பரம் தாலுகாவின் வட்டார வளர்ச்சி அதிகாரிக்கும், தாசில்தாருக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். அபராத தொகையை 4 வாரங்களில் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தின் உத்தரவுகளை குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யும் வரை காத்திருக்க கூடாது என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதே போல, கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விருத்தாசலம் தாசில்தாருக்கும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.