தோழர் நல்லகண்ணு அனைவர் மனங்களில் விதைத்த விதைகள் இன்னும் பல நல்லகண்ணுகளாக மலர்ந்து, அவரது ஒளி நிலைத்திருப்பதை உறுதி செய்யும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான இரா. நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக உடல் நலம் குன்றிய நிலையில் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில், அவரது உயிர் பிரிந்ததாக நேற்று (25.02.2026) பிற்பகலில் மருத்துவமனை அறிவித்தது.
101 வயதில் இயற்கை எய்திய நல்லகண்ணுவின் உடலுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அஞ்சலி செலுத்தினார். பின்னர் வீடு திரும்பிய அவர் நல்லகண்ணு அவர்களின் மறைவுக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், இடைவிடாத சேவைக்கான கீதமாக ஒலித்துக் கொண்டிருந்த தோழர் நல்லகண்ணு விடைபெற்று, உலகத்தை விட்டு வெளியேறிவிட்டார் என்றும், கிட்டத்தட்ட ஒன்பது தசாப்தங்களாக பிறருக்காக அர்ப்பணிக்கப்பட்ட தன்னலமற்ற தன்மையை எதிரொலிக்கும் வகையிலான ஒரு வெற்றிடத்தை விட்டுச்சென்றுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சகாப்தத்தை தோழர் நல்லகணனுவுடன் பகிர்ந்து கொண்ட சில அதிர்ஷ்டசாலிகளில் தானும் ஒருவனாக கருதவதாகவும், அவரது சொந்த இல்லத்தில் ஒரு நூலகத்தைத் திறந்து வைக்கும் அரிய பாக்கியம் தனக்கு கிடைத்த வகையில் தான் ஒரு ஆசீர்வதிக்கப்பட்டவன் என்றும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஏனென்றால் அந்த நூலகத்தை அவர் தனக்காக உருவாக்கவில்லை என்றும், அது அனைவருக்குமான, தாழ்மையுடன் கட்டப்பட்ட அறிவுச் சரணாலயம் என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.

நல்லகண்ணு ஆதரித்த சித்தாந்தங்களையோ அல்லது சுமந்து சென்ற அரசியல் பதாகைகளையோ மறந்து விடுங்கள் என்றும், இந்த மகத்தான மனிதர் எப்படி வாழ்ந்தார் என்ற உண்மையின் முன் அவை வெளிர் நிறமாகின்றன என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்டுள்ளார்.
சுயநலத்தால் கறைபடாத அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு மூச்சும், ஒவ்வொரு அடியும், பிரதிபலனை எதிர்பார்க்காமல் கொடுக்கப்பட்டது. என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், எப்போதாவது தன்னைப் பற்றி சிந்திக்க சிறிது நேரம் ஒதுக்காமல், ஓர் அரிய முன்மாதிரியாக நின்றார் என்றும், எண்ணற்ற இதயங்களில் நோக்கத்துடன் கூடிய விதைகளை விதைத்து, தியாகம் மட்டுமே செய்த ஒரு தலைவர் நல்லகண்ணு என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
தோழர் நல்லகண்ணுவுக்கு இறுதி மரியாதை செலுத்திய பிறகு வீடு திரும்பிய பின்னர், எதையும் தொடாமல் குளிப்பதற்கான தங்கள் பாரம்பரியத்தை மதித்ததாக குறிப்பிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆனாலும் தனக்குள் ஏதோ ஒன்று கிளர்ந்தெழுந்ததாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலாக நான் கை நீட்டி, சாத்தியமான அனைத்தையும் தொட்டு, அவரது நினைவுகளை கைவிடவும் தயங்கியதாகவும், அவரைப்போல வாழ முடியுமா என்று சோதிக்க அவரது இருப்பு என் இருப்புக்குள் ஊடுருவி, எல்லா இடங்களிலும் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்பியதாகவும் தனது ஆவலை தெரிவித்துள்ளார்.
தோழர் நல்லகண்ணு அனைவர் மனங்களிலும், ஆன்மாக்களிலும் பதித்துள்ள அழியாத முத்திரை மற்றும் விதைத்த விதைகள் இன்னும் பல நல்லகண்ணுகளாக மலர்ந்து, உங்கள் ஒளி நிலைத்திருப்பதை உறுதி செய்யும் என்றும் முத்தாய்ப்பாக தன் கருத்தை கடிதத்தில் பதிவு செய்துள்ளார்.
ரெட் சல்யூட், தோழர் என்றும் குறிப்பிட்டு அஞ்சலி செலுத்தியுள்ள நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், தோழர் நல்லகண்ணு மறைவில், நீங்கள் எங்களுக்கு இழப்பை கொடுக்கவில்லை என்றும், தன்னலமற்ற வாழ்க்கையின் அழியாமையைக் கற்பிக்கிறீர்கள் என்றும் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.