மதத்தை துறக்காமல், ஒருவர் தனக்கு “சாதி இல்லை – மதம் இல்லை” என சான்றிதழ் வழங்கும்படி கேட்கமுடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தைச் சேர்ந்த செல்லமாணிக்கம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தனக்கு “சாதி இல்லை- மதம் இல்லை” என சான்றிதழ் வழங்கக் கோரி அளித்த மனுவை, திருப்பத்தூர் வட்டாட்சியர் நிராகரித்துவிட்டதாகவும், அந்த உத்தரவை ரத்து செய்து சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் தனது பெற்றோர் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், தனக்கு சாதி இல்லை – மதம் இல்லை என சான்றிதழ் வழங்கக் கோரியதாகவும், ஆனால் அதற்கான அரசு உத்தரவு இல்லை என கூறி, தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், “சாதி இல்லை – மதம் இல்லை” என சான்றிதழ் வழங்குவதற்கு எந்த அரசாணையும் இல்லாத நிலையிலேயே மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதால், அது சரியானதே என்றும், நீதிமன்றம் இதில் தலையிட வேண்டிய அவசியமில்லை என வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, மனுதாரரின் பெற்றோர் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மனுதாரரும் இந்து மதத்தை சேர்ந்தவராகவே இருக்கின்ற நிலையில், மனுதாரர் தனது இந்து மதத்தை முறையாக துறக்கவில்லை என்பது தெளிவாக தெரிவதாக குறிப்பிட்டுள்ளார்.
தனது மதத்தை முறையாக துறக்காத வரை அவர் சான்றிதழ் கேட்கும் கோரிக்கையை பரிசீலிக்க இயலாது என்பதால், சாதி இல்லை – மதம் இல்லை என சான்றிதழ் வழங்கும் கேள்வியை எழாது என்றும் உத்தரவிட்டுள்ளார். அதோடு மதத்தை துறந்ததாக மனுதாரர் எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை என்பதால், சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இருப்பினும் மதத்தை துறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க மனுதாரருக்கு உரிமை உள்ளது என்றும், அவ்வாறு தேவையான விண்ணப்பம் மற்றும் ஆதாரங்களுடன் மனுத்தாக்கல் செய்தால் நடைமுறையில் உள்ள விதிகளின் அடிப்படையில் அதனை பரிசீலிக்கலாம் என்றும், விதிமுறைகள் இல்லையெனில் புதிதாக விதிகளை உருவாக்கி பரிசீலிக்கலாம் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.