பழங்குடியின மக்களுக்கென ஒதுக்கப்பட்ட நிலங்களை, பழங்குடியினர் அல்லாத மற்றவர்கள் விலைக்கு வாங்குவது சட்டப்படி செல்லாது என்றும், அத்தகைய நிலங்களை அரசு மீண்டும் கையகப்படுத்தலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், கல்வராயன் மலைப் பகுதியில் பழங்குடியினரிடமிருந்து சுமார் 32 ஏக்கர் பட்டா நிலங்களை வினோதன் கந்தையா என்பவர் உள்ளிட்ட சிலர் விலைக்கு வாங்கியிருந்தனர். இந்த நிலங்களுக்குத் தடையற்ற அதிகாரம் கோரி அவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரணை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி கே. கோவிந்தராஜன் திலகவதி, பிப்ரவரி 13, 2026 அன்று விசாரித்து தீர்ப்பு வழங்கினார். பழங்குடியின மக்கள் தங்களின் அறியாமை மற்றும் வறுமை காரணமாக சுரண்டப்படுவதைத் தடுக்க அவர்களுக்கு சிறப்பு சட்டப் பாதுகாப்பு அவசியம் எனவும், வருவாய்த் துறை நிலை ஆணை BSO 15.40-ன் படி, பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை அந்த சமூகத்தை சேராதவர்களுக்கு விற்பனை செய்வது சட்டப்படி செல்லாது எனவும் தெரிவித்தனர்.
தகுந்த அரசு அதிகாரியின் முன் அனுமதி இன்றி நிலங்களை மாற்றவோ அல்லது விற்கவோ முடியாது. அவ்வாறு விதிகளை மீறி விற்பனை செய்யப்பட்ட நிலங்களை எவ்வித இழப்பீடும் இன்றி அரசு மீண்டும் கையகப்படுத்தலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த நிலங்கள் மீது பழங்குடியினர் அல்லாதவர்கள் சட்டப்பூர்வமான உரிமையோ அல்லது நீண்ட கால ஆக்கிரமிப்பின் அடிப்படையில் உரிமையோ கோர முடியாது என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் உறுதிபட தெரிவித்தனர்.
மனுதாரர்கள் நிலத்தின் மீது முறையான சட்டப்பூர்வ உரிமையைப் பெறவில்லை என்பதால், அவர்களின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், விசாரணை நீதிமன்றங்களின் தீர்ப்பை உறுதி செய்தது. இந்த தீர்ப்பானது, தமிழகம் முழுவதும் பழங்குடியின நிலங்களை ஆக்கிரமித்துள்ள அல்லது வாங்கியுள்ள நபர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது