விலங்கு நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இன்று மிக முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இறைச்சி கடைகளில் ஆடு, மாடுகளை வெட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், மிருக வதை தடுப்புச் சட்ட விதிகளைச் சரியாகப் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
மனுதாரர் தனது புகாரில், “மிருக வதை சட்டப்படி ஆடு, மாடுகளை மற்ற விலங்குகளின் கண் முன்னே வெட்டக்கூடாது, ரத்தத்தை முறையாகச் சேகரிக்க வேண்டும் மற்றும் கால்நடை மருத்துவரின் சான்றிதழ் பெற்ற விலங்குகளை மட்டுமே வெட்ட வேண்டும்” என்ற விதிகள் மீறப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாகச் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஆர். சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு, மனுதாரரின் வாதத்தில் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டியது. எந்தக் குறிப்பிட்ட கடையில் விதிமீறல் நடக்கிறது என்ற விவரங்கள் இல்லாமல், பொத்தாம் பொதுவாகத் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை நீதிமன்றம் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.