நெல்லை தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக கூறி, இவ்வழக்கை CBI விசாரணைக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவலர் முன்வைக்கும் அதிரடிப் புகார்
தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு நிலைய காவலர் செந்தில்குமார் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2025 நவம்பர் 18-ஆம் தேதி நெல்லை துணை இயக்குனர் அலுவலகத்திற்கு தான் சென்றபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் தன்னை மிரட்டி அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிகாரியின் அலமாரியில் இருந்த ஒரு கவரைத் தூக்கச் சொல்லி கட்டாயப்படுத்தி, பின்னர் தனது பெயரையும், துணை இயக்குனர் சரவணபாபு பெயரையும் சேர்த்து 2.51 லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் பறிமுதல் செய்ததாகப் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சிசிடிவி கேமராவில் சிக்கிய மர்ம நபர்
மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய ஆதாரத்தின்படி, சம்பவத்திற்கு முந்தைய நாள் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து, அலுவலகக் கதவைத் திறந்து உள்ளே பணத்தை வைத்துவிட்டுச் செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்துப் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், விஜய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், அதிகாரிகளைப் பழிவாங்கத் திட்டமிட்டுப் பணம் வைக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதித் திட்டம் மற்றும் CBI கோரிக்கை
திருப்பூரை சேர்ந்த வீரராஜ் என்பவர் தலைமையிலான கும்பல், அதிகாரிகளின் வாகனங்கள் அல்லது அலமாரிகளில் ரகசியமாகப் பணத்தை வைத்துவிட்டு, லஞ்ச ஒழிப்புத்துறையினரைத் தவறாக வழிநடத்தி சோதனைகளை நடத்தி வருவதாக மனுதாரர் பகீர் புகாரைப் பதிவு செய்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கு மற்றும் பெருமாள்புரம் போலீசார் பதிவு செய்த வழக்கு என இரண்டையும் ஒரே அதிகாரியின் கீழ், குறிப்பாக CBI விசாரணைக்கு மாற்றினால் மட்டுமே உண்மை வெளிவரும் என அவர் கோரியுள்ளார்.
நீதிமன்றத்தின் விசாரணை மற்றும் உத்தரவு
இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மனுதாரர் எழுப்பியுள்ள கேள்விகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விரிவான பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மார்ச் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஆணையிட்டார்.