தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே நிலவி வரும் குடும்பப் பிரச்சினை, தற்போது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்காக உருவெடுத்துள்ளது. இதில் சங்கீதா விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், விஜய் தரப்பு தமக்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்டுள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
வழக்கின் பின்னணி
கடந்த 1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ல் சென்னையில் சீர்திருத்த முறையில் திருமணம் செய்துகொண்ட விஜய் – சங்கீதா தம்பதியினர், கடந்த 26 ஆண்டுகளாகத் தங்களது திருமண வாழ்க்கையைத் தொடர்ந்து வந்தனர். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் (25) மற்றும் திவ்யா சாஷா (20) என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், தங்களுக்குள் நிலவும் கருத்து வேறுபாடு காரணமாக, ‘சிறப்பு திருமணச் சட்டம் 1954’-ன் கீழ் விவாகரத்து கோரி சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் (பிப்ரவரி 22, 2026) மனுத்தாக்கல் செய்துள்ளார்.
விஜய் தரப்பு மிரட்டல் – சங்கீதாவின் பகீர் புகார்
இந்த விவாகரத்து மனுவில் சங்கீதா விஜய் முன்வைத்துள்ள மிக முக்கியமான மற்றும் புதிய குற்றச்சாட்டுகள்:
- சுமுக முயற்சி தோல்வி: விஜய்யின் சினிமா மற்றும் அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கண்ணியமான முறையில் சுமுகமாகப் பிரிய (Amicable dissolution) தான் எடுத்த பல கட்ட முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதாகச் சங்கீதா தெரிவித்துள்ளார்.
- வீட்டில் வசிக்கத் தடை: தான் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகினால், தற்போது வசித்து வரும் நீலாங்கரை இல்லத்தில் (Matrimonial Home) தங்குவதற்கு அனுமதி கிடையாது என்று விஜய் தரப்பு வழக்கறிஞர் மூலம் தமக்குத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார்.
- பாதுகாப்பு கோரிக்கை: தான் ஒரு பிரிட்டிஷ் குடிமகன் என்பதால், இந்தியாவில் தமக்கு வேறு இருப்பிடம் இல்லை. எனவே, வழக்கு முடியும் வரை அல்லது விஜய்யின் அந்தஸ்திற்கு இணையான மாற்று இடம் வழங்கும் வரை, நீலாங்கரை வீட்டிலேயே வசிக்கத் தமக்கு இடைக்காலத் தடை (Interim Order) வழங்க வேண்டும் என அவர் மன்றாடியுள்ளார்.
சங்கீதா முன்வைக்கும் வாதங்கள்
- அர்ப்பணிப்பான வாழ்க்கை: கடந்த 26 ஆண்டுகளாக விஜய்யின் புகழுக்கும் அந்தஸ்திற்கும் ஏற்ப, ஒரு கடமையுள்ள இல்லத்தரசியாகத் தார்மீகப் பொறுப்புடன் குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஜீவனாம்சம்: விஜய்யின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் பிரம்மாண்டமான வருமானத்திற்கு ஏற்ப, தமக்குத் தகுதியான நிரந்தர ஜீவனாம்சம் (Permanent Alimony) வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சிறப்பு திருமணச் சட்டம் என்றால் என்ன?
வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது மதச் சடங்குகள் இன்றிப் பதிவுத் திருமணம் செய்துகொண்டவர்கள் விவாகரத்து பெற விரும்பினால், இந்தச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்து திருமணச் சட்டத்தைப் போலவே, இதிலும் பரஸ்பர சம்மதத்தின் பேரிடலோ அல்லது சில குறிப்பிட்ட காரணங்களின் (cruelty, desertion, etc.) அடிப்படையிலோ விவாகரத்து கோர முடியும்.