சட்டம் மற்றும் உரிமைகள் குறித்து வாசகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளும், அவற்றுக்கான சட்ட ரீதியான பதில்களும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
அரசியல்வாதிகள் கொள்ளையடித்த சொத்துக்களைப் பறிக்கச் சட்டம் உண்டா?
ஊழல் தடுப்புச் சட்டத்தின் (Prevention of Corruption Act) கீழ், ஒரு பொது ஊழியர் அல்லது அரசியல்வாதி வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய சட்டத்தில் இடமுண்டு. ஆனால், அதற்கு முறையான ஆதாரங்களுடன் புகாரளிக்கப்பட வேண்டும். அரசியல் மாற்றங்கள் நிகழும்போது லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வழிவகை உள்ளது.
தவணை முறைப் பொருளுக்குப் பிணைக் கையெழுத்து (Surety) போட்டால் நான் பணம் கட்ட வேண்டுமா?
ஆம், கண்டிப்பாக கட்ட வேண்டும். பிணைக் கையெழுத்து இட்டவர், கடன் வாங்கியவருக்கு இணையான பொறுப்புடையவர் ஆவார். கடன் வாங்கியவர் கட்டத் தவறினால், நிறுவனம் உங்கள் மீது வழக்குத் தொடர முடியும். நீங்கள் தொகையை செலுத்திய பிறகு, கடன் வாங்கியவர் மீது சிவில் வழக்குத் தொடந்து அந்த தொகை, வட்டி மற்றும் நீதிமன்ற செலவுகளை அவரிடமிருந்து சட்டப்படி வசூலித்துக் கொள்ளலாம்.
மனைவி விவாகரத்து பெறாமல் பிரிந்து சென்றால், சொத்தில் பங்கு கேட்க முடியுமா?
மனைவியோ அல்லது கணவனோ ஒரு காகிதத்தில் ‘விடுதலைப் பத்திரம்’ எழுதிக் கொடுப்பது சட்டப்படி செல்லாது. முறையாக நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெறாத வரை, உங்கள் மனைவிக்கு உங்கள் சொத்தில் சட்டப்பூர்வ உரிமை உண்டு. மேலும், விவாகரத்து பெறாமல் நீங்கள் மறுமணம் செய்வதும் சட்டப்படி குற்றமாகும். எனவே, நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெறுவதே நிரந்தரத் தீர்வாகும்.
கொலை அல்லது தற்கொலை பற்றி தகவல் கொடுத்தால் சாட்சி சொல்ல வேண்டுமா?
ஒரு குற்றச் சம்பவம் குறித்து தகவல் கொடுத்தவர் அல்லது நேரில் பார்த்தவர் சாட்சி சொல்வது ஒரு நல்ல குடிமகனின் கடமையாகும். உண்மையை நீதிமன்றத்தில் வாக்குமூலமாக அளிப்பதன் மூலம் நீதி நிலைநாட்டப்படும். சாட்சி சொல்லப் பயப்படுவது கடமையை தவறுவதற்கு சமம். குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டத்தின் கீழ் (CrPC) சாட்சியம் அளிப்பது அவசியமானது.
பிரிந்து வாழ்ந்த கணவன், 10 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தையைக் கேட்க முடியுமா?
உங்களைத் தவிக்கவிட்டு சென்ற கணவர், பத்து ஆண்டுகள் கழித்து வந்து திடீரென குழந்தையை கோர முடியாது. நீதிமன்றம் எப்போதும் ‘குழந்தையின் நலனை’ (Welfare of the Child) மட்டுமே பிரதானமாக கருதும். தாயின் அரவணைப்பில் வளர்ந்த குழந்தையை, பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட தந்தையிடம் ஒப்படைக்க நீதிமன்றம் விரும்பாது. எனவே, நீங்கள் குழந்தையை இழக்க நேரிடும் என்று பயப்படத் தேவையில்லை.
குளிரூட்டப்பட்ட (A/C) தியேட்டரில் வசதி இல்லாவிட்டால் என்ன நடவடிக்கை எடுக்கலாம்?
இது ஒரு சேவை குறைபாடு (Deficiency in Service) மற்றும் ஏமாற்று வேலையாகும். எனவே உரிய வசதி வழங்காததற்காக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்து நஷ்டஈடு கோரலாம். தொடர்ச்சியாக இது போன்ற ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டால் காவல் நிலையத்தில் புகாரளிக்கலாம். விளம்பரப்படுத்தப்பட்ட வசதிகளை வழங்க வேண்டியது தியேட்டர் நிர்வாகத்தின் கடமையாகும்.
நன்றி
வெ.கண்ணன்
வழக்கறிஞர், மதுரை உயர்நீதிமன்றம்