பொது ஏலத்தில் இட ஒதுக்கீடு வழங்கக் கோருவது சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டனர்.
மனுதாரரின் கோரிக்கை
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த குமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் குழித்துறை நகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் கடைகளை ஒதுக்கீடு செய்யும்போது, கல்வி மற்றும் அரசுப் பணிகளில் வழங்கப்படுவதைப் போல பட்டியல் சமூகத்தினருக்கு (SC/ST) இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சமூக நீதியின் அடிப்படையில் இந்த ஒதுக்கீடு கடை ஒதுக்கீட்டிலும் பின்பற்றப்பட வேண்டும் என மனுத்தாக்கல் செய்தார்
நீதிமன்றத்தின் கண்டனம்
இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொது ஏலத்தில் இட ஒதுக்கீடு கோருவது எந்த விதத்தில் நியாயம்? சட்ட அடிப்படையில் கோரிக்கைகளை முன்வைத்தால் மட்டுமே அதனை நீதிமன்றம் பரிசீலிக்க முடியும் என கருத்து தெரிவித்தனர்.
எவ்வித சட்ட அடிப்படையும் இல்லாமல், சுயநலத்திற்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் இத்தகைய கோரிக்கைகளை ஏற்க முடியாது எனக் கூறி மனுதாரரின் வாதத்தில் முகாந்திரம் இல்லாததால், இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பொது ஏலம் மற்றும் இட ஒதுக்கீடு என்றால் என்ன?
அரசு அல்லது நகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் விடப்படும்போது, அவை அதிக வருவாய் ஈட்டும் நோக்கில் பொது ஏலமாகவே நடத்தப்படும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீடு முறையை, வணிக ரீதியிலான ஏல நடவடிக்கைகளில் கட்டாயமாக்க சட்டத்தில் தனிப்பிரிவு இல்லை. இதையே நீதிபதிகள் இந்த தீர்ப்பின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர்.