
2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய இந்தத் துயரச் சம்பவம், தமிழக காவல் துறையின் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகப் பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு கடந்து வந்த முக்கியக் கட்டங்களை இங்கே பார்க்கலாம்

கொடூரத் தாக்குதலும் மரணமும்
- ஜூன் 19, 2020 : ஊரடங்கு விதிகளை மீறி கடை திறந்ததாகக் கூறி தந்தை ஜெயராஜ், மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் சாத்தான்குளம் போலீசார் அழைத்து சென்று காவல் நிலையத்தில் வைத்து விடிய விடியக் கொடூரமாகத் தாக்கினர்.
- ஜூன் 20, 2020 : பலத்த காயங்களுடன் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- ஜூன் 23, 2020 : முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் சிறையிலேயே தந்தை மற்றும் மகன் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.

சிபிசிஐடி விசாரணை
- ஜூலை 01, 2020 : சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து வழக்கை விசாரித்தது. உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிசிஐடி உடனடியாக விசாரணையைத் தொடங்கியது. முதல் கட்டமாக S.I. ரகு கணேஷ் கைது செய்யப்பட்டார்.
- ஜூலை 02 – 08, 2020 : அடுத்தடுத்த நாட்களில் ஆய்வாளர் ஸ்ரீதர், S.I. பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் என மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். (இவர்களில் சிறப்புச் சார்பு ஆய்வாளர் பால்துரை பின்னர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்).


சிபிஐ வசம் வழக்கு

- ஜூலை 07, 2020 : தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கை சிபிஐ (CBI) கையில் எடுத்தது.
- குற்றப்பத்திரிகை: 105 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, சுமார் 2,427 பக்கங்கள் கொண்ட பிரம்மாண்டமான குற்றப்பத்திரிகையை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
- முக்கிய சாட்சியங்கள்: பெண் போலீஸ் ரேவதி, பியூலா மற்றும் S.I ரவிச்சந்திரன் ஆகியோரின் சாட்சியங்கள் வழக்கில் மிக முக்கியப் பங்கு வகித்தன.
- அப்ரூவர் கோரிக்கை நிராகரிப்பு: முக்கியக் குற்றவாளியான ஆய்வாளர் ஸ்ரீதர் ‘அப்ரூவராக’ மாற முன்வந்த கோரிக்கையை சிபிஐ மற்றும் ஜெயராஜின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்ததால் அது நிராகரிக்கப்பட்டது.


நீதிமன்ற இழுபறியும் உயர் நீதிமன்ற உத்தரவும்
- நீதிபதிகள் மாற்றம்: இந்த வழக்கை இதுவரை 4 நீதிபதிகள் விசாரித்த நிலையில், தற்போது 5-வது நீதிபதியாக (பொறுப்பு நீதிபதி) இருப்பவர் இறுதி விசாரணையை நடத்தினார்.
- தாமதத்திற்கான காரணம்: குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாருக்கும் தனித்தனியாக 9 வழக்கறிஞர்கள் இருந்ததால், அவர்கள் ஒவ்வொருவரும் 105 சாட்சிகளையும் தனித்தனியாகக் குறுக்கு விசாரணை செய்தது காலதாமதத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
- உயர் நீதிமன்றக் கெடு: 5 ஆண்டுகளாகியும் விசாரணை முடிவடையாததால் அதிருப்தி அடைந்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, 3 மாத காலத்திற்குள் வழக்கை முடித்துத் தீர்ப்பளிக்கக் கீழ் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இன்றைய எதிர்பார்ப்பு!
சாத்தான்குளம் வழக்கு என்பது வெறும் இரண்டு உயிர்கள் பறிபோனது தொடர்பான வழக்கு மட்டுமல்ல; அது அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான சாதாரண மனிதனின் சட்டப் போராட்டம். இன்று வழங்கப்படவுள்ள தீர்ப்பு, “சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம்” என்பதையும், சீருடை அணிந்தவர்கள் செய்யும் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை உண்டு என்பதையும் நிலைநாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது
