சிவகங்கை இளைஞர் ஆகாஷின் மரணத்திற்குத் தொடர்புடைய காவல்துறையினரைக் கைது செய்யக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை, “உடலை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்” என்று கூறி மதுரை உயர் நீதிமன்றக் கிளை இன்று தள்ளுபடி செய்தது.
வழக்கின் பின்னணி
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர், காவல்துறையினரின் விசாரணைக்குப் பிறகு மர்மமான முறையில் உயிரிழந்தார். காவல்துறையினர் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்தார் எனக் குற்றம் சாட்டிய அவரது குடும்பத்தினர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கைது செய்யும் வரை உடலைப் பெற மாட்டோம் எனத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுநல மனு மற்றும் கோரிக்கைகள்
மதுரை மானகிரியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் ஆகாஷின் மரணத்திற்குத் தொடர்புடைய காவல்துறையினர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். தேர்தல் நடைபெற உள்ளதால், சிவகங்கை மாவட்டக் காவல்துறையினரை ஒட்டுமொத்தமாகப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
அரசுத் தரப்பு விளக்கம்
இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல் கான் இந்த வழக்கு ஏற்கனவே CB-CID விசாரணைக்கு மாற்றப்பட்டு, முறையான விசாரணை நடைபெற்று வருகிறது. நீதித்துறை நடுவர் (Magistrate) முன்னிலையில் 196-வது பிரிவின் கீழ் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுக்கு உள்ளான 7 காவல்துறையினர் ஏற்கனவே பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளனர் என விளக்கமளித்தார்
நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கை மற்றும் தீர்ப்பு
விசாரணையின் போது, அனைத்துக் கோரிக்கைகளும் ஏற்கப்பட்ட பின்பும் ஏன் உடலைப் பெறாமல் போராட்டம் நடத்துகிறீர்கள் என்று மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்
மேலும், “இறந்தவர் உடலை வைத்து அரசியல் செய்வது ஏற்கத்தக்கது அல்ல. உடலுக்கு இறுதி மரியாதை செய்வது ஒரு அடிப்படை உரிமை; அதனைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
“நீதிமன்றத்தை உங்களின் தனிப்பட்ட விருப்பத்திற்கோ அல்லது விளம்பரத்திற்காகவோ பயன்படுத்த வேண்டாம். தற்போது உடலை வைத்துப் போராடுவது ஒரு ‘பேஷனாக’ (Fashion) மாறிவிட்டது” என நீதிபதிகள் எச்சரித்தனர்.
இந்த மனு பொதுநல நோக்கில் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி, அதனைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தற்போதைய நிலை
சிபிசிஐடி விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், காவல்துறையினர் கைது செய்யப்படும் வரை உடலை வாங்கப் போவதில்லை என்ற முடிவில் ஆகாஷின் குடும்பத்தினர் உறுதியாக உள்ளனர். நீதிமன்றத்தின் இன்றைய கண்டிப்பான உத்தரவு இப்போராட்டத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.