மதுரை தெற்குவாசல் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நிர்வாகக் குழு மீது வக்பு வாரியம் எடுத்த நடவடிக்கையை ரத்து செய்யக் கோரிய சீராய்வு மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. “விசாரணை முறையாகவே நடந்துள்ளது” எனக் கூறி நீதிபதி இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
வழக்கின் பின்னணி
மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்த கமர்ர்தீன் மற்றும் சிலர் தாக்கல் செய்த சீராய்வு மனுவில் 2022-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 20 பேர் கொண்ட குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தக் குழு மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்காமலேயே வக்பு வாரியம் நடவடிக்கை எடுத்ததாக மனுதாரர்கள் குற்றம் சாட்டினர். இந்த நடவடிக்கையை வக்பு வாரியத் தீர்ப்பாயமும் உறுதி செய்த நிலையில், அதனை ரத்து செய்யக் கோரியுள்ளனர்.
வக்பு வாரியத்தின் பதில்
வழக்கு விசாரணையின் போது வக்பு வாரியத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 2023 செப்டம்பர் 7-ம் தேதி வக்பு வாரிய நிர்வாகிகள் அடங்கிய குழு நேரில் சென்று ஆய்வு நடத்தியது. ஆய்வில் கண்டறியப்பட்ட தவறுகளின் அடிப்படையில், 19 குற்றச்சாட்டுகள் அடங்கிய நோட்டீஸ் வழங்கப்பட்டு, முறைப்படி விசாரணை நடத்தப்பட்ட பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டது என விளக்கமளித்தார்.
நீதிபதி பி.பி. பாலாஜியின் தீர்ப்பு
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “விசாரணை முறையாக நடக்கவில்லை” என்று மனுதாரர்கள் கூறுவதில் எந்த ஆதாரமும் இல்லை. ஒவ்வொரு குற்றச்சாட்டையும் வக்பு வாரியம் தனித்தனியாகவும், முறையாகவும் கையாண்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களின் விளக்கங்கள் பரிசீலிக்கப்பட்டு, தீர்ப்பாயமும் அதனை உறுதி செய்துள்ள நிலையில், நீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. இதனடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்துச் சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என தீர்ப்பளித்தார்.
வக்பு வாரியத்தின் அதிகாரம் (Waqf Act) என்ன?
வக்பு சட்டத்தின்படி, ஒரு பள்ளிவாசல் அல்லது தர்காவின் நிர்வாகக் குழு முறையாக செயல்படவில்லை என்றாலோ அல்லது நிதி முறைகேடு புகார்கள் எழுந்தாலோ, அந்தப் பழைய குழுவைக் கலைத்துவிட்டுப் புதிய நிர்வாகத்தை நியமிக்க அல்லது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வர வக்பு வாரியத்திற்கு அதிகாரம் உண்டு. ஆனால், அதற்கு முன்னதாக சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கில் அந்த நடைமுறை சரியாகப் பின்பற்றப்பட்டுள்ளதாக நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.