பிரபல உணவகச் சங்கிலியான ‘சங்கீதா’ தனது வர்த்தக முத்திரையையும், உணவகத்தின் தனித்துவமான வண்ணங்களையும் தவறாகப் பயன்படுத்தியதாகத் தொடர்ந்த வழக்கில், ‘கீதம்’ உணவகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் ₹10 லட்சம் அபராதம் விதித்ததோடு, குறிப்பிட்ட காலக்கட்டத்தின் லாபத்தையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
‘கீதம்’ உணவகத்தின் உரிமையாளர்கள், முன்பு ‘சங்கீதா’ உணவகத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களாக (Franchisees) வேளச்சேரி, டி.நகர் உள்ளிட்ட 5 இடங்களில் உணவகங்களை நடத்தி வந்தனர். மே 31, 2022-ல் அந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஜூன் 1, 2022 முதல் அதே இடங்களில் ‘கீதம்’ என்ற புதிய பெயரில் உணவகங்களைத் தொடங்கினர். சங்கீதா உணவகத்தைப் போலவே சிவப்பு மற்றும் பச்சை வண்ணங்களைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களைக் குழப்பும் வகையில் ‘கீதம்’ செயல்படுவதாகச் சங்கீதா தரப்பு வழக்குத் தொடர்ந்தது.
நீதியரசர் செந்தில்குமார் ராமமூர்த்தி வழங்கிய தீர்ப்பு
வழக்கை விசாரித்த நீதிபதி, ‘கீதம்’ நிறுவனம் வாடிக்கையாளர்களைத் திசைதிருப்ப முயன்றதை உறுதி செய்து ஜூன் 1, 2022 முதல் நவம்பர் 2, 2023 வரை ‘கீதம்’ பயன்படுத்திய லோகோ மற்றும் வண்ணங்கள், சங்கீதா உணவகமே பெயர் மாறிவிட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கியதை நீதிமன்றம் கண்டறிந்தது. அந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில், சர்ச்சைக்குரிய லோகோவைப் பயன்படுத்தி ஈட்டிய முழு லாபத்தையும் கணக்கிட்டு சங்கீதா நிறுவனத்திடம் வழங்க வேண்டும்.
நீதிமன்றக் கட்டணம் மற்றும் வழக்கறிஞர் செலவுகளுக்காக ₹10,00,000 (10 லட்சம் ரூபாய்) அபராதத்தை சங்கீதா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாற்றப்பட்ட லோகோவிற்கு அனுமதி!
நவம்பர் 2, 2023 முதல் ‘கீதம்’ நிறுவனம் தனது லோகோவின் வண்ணம் (ஆரஞ்சு நிறம்) மற்றும் எழுத்து முறையை முழுமையாக மாற்றியுள்ளது. இந்த மாற்றத்திற்குப் பிறகு வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை என்பதால், புதிய லோகோவைப் பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Trade Dress என்றால் என்ன?
ஒரு நிறுவனம் பயன்படுத்தும் தனித்துவமான நிறங்கள், எழுத்து வடிவம் மற்றும் கடையின் வடிவமைப்பு ஆகியவற்றைத்தான் 'டிரேடு டிரஸ்' என்பார்கள். ஒரு பிரபலமான கடையின் அதே நிறத்தையும் வடிவத்தையும் மற்றொரு கடை பயன்படுத்தினால், வாடிக்கையாளர்கள் இதுவும் அதே நிறுவனத்தின் கிளைதான் என நம்பி ஏமாற வாய்ப்புள்ளது. இதனைத் தடுக்கவே அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் இத்தகைய கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.