தமிழகம் முழுவதும் உள்ள மனமகிழ் மன்றங்களுக்குள் (Recreation Clubs) ஆய்வு என்ற பெயரில் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் மற்றும் சமூக வலைதளப் பிரபலங்கள் புகுந்து அராஜகத்தில் ஈடுபடுவதை தடுத்து, உரிமையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கின் பின்னணி
தமிழ்நாடு மனமகிழ் மன்ற உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வீரபாண்டியன் தாக்கல் செய்துள்ள மனுவில்
- முறையான அனுமதி: தமிழகம் முழுவதும் அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் ₹11 லட்சம் உரிமக் கட்டணம் செலுத்தி, உரிய அனுமதியுடன் மனமகிழ் மன்றங்களை நடத்தி வருகிறோம். இங்கு உறுப்பினர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படுகிறது.
- அராஜக செயல்: தற்போதைய நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுங்கட்சி நிர்வாகிகள் மற்றும் YouTube Influencers என்ற பெயரில் சிலர் மன்றங்களுக்குள் அத்துமீறி நுழைகின்றனர்.
- ரீல்ஸ் மோகம்: சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக சித்தரித்து, அங்கு மது அருந்திக் கொண்டிருப்பவர்களை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ (Reels) வெளியிட்டு அட்ராசிட்டி செய்கின்றனர்.
- மிரட்டல்: இந்த வீடியோக்களை வைத்துக்கொண்டு மன்ற உரிமையாளர்களைப் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். கூமாபட்டி மற்றும் திருச்சி மாவட்டங்களில் கடந்த மாதம் இத்தகைய அராஜகங்கள் நிகழ்ந்துள்ளன. முறையாக ஆய்வு செய்ய வேண்டிய அரசு அதிகாரிகள் இருக்கும்போது, இவர்கள் யார் ஆய்வு செய்ய?
உள்ளிட்டவற்றை குறிப்பிட்டிருந்தார்.
நீதிமன்றத்தில் வாதம்
இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி
“தற்போதைய ஆட்சியில் ‘ரீல்ஸ்’ மோகம் அதிகரித்துள்ளது. இதற்காகவே ஆளுங்கட்சித் தரப்பினர் இத்தகைய அட்டகாசங்களில் ஈடுபடுகின்றனர். இது வாடிக்கையாளர்களின் தனிமனித உரிமையைப் பாதிப்பதோடு, எங்களது தொழிலையும் முடக்குகிறது. எனவே, மனமகிழ் மன்ற உரிமையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையாளருக்கு உத்தரவிட வேண்டும்.”
என்று வாதிட்டார்.
நீதிபதியின் கேள்வி
மனுதாரர் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, அரசு தரப்பை நோக்கி
“மதுபான விடுதிகள் மற்றும் மனமகிழ் மன்றங்களுக்குள் அரசியல்வாதிகள், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் சென்று ஆய்வு நடத்த சட்டத்தில் இடமுண்டா? இது குறித்து அரசு தரப்பில் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்.”
என்று உத்தரவிட்டார்.
அரசு அனுமதி பெற்றுச் செயல்படும் வணிக வளாகங்களுக்குள், அரசு அதிகாரிகள் இன்றித் தனி நபர்கள் புகுந்து வீடியோ எடுப்பதும், ஆய்வு நடத்துவதும் சட்டத்திற்குப் புறம்பான செயல் என்பதை இந்த வழக்கின் மூலம் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. வரும் விசாரணையில் அரசு அளிக்கும் பதிலைப் பொறுத்து, இத்தகைய அராஜகங்களைத் தடுக்கப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.