2026-2027 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் விவாதத்தில் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன், நீதிபதிகளின் நிதி பாதுகாப்பு, நீதிமன்ற உள்கட்டமைப்பு மற்றும் ஒன்றிய அரசின் மானியக் குறைப்பு குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
நீதித்துறைக்கான முக்கியக் கோரிக்கைகள்
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 70 ஆக உயர்த்த வேண்டும். (தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 65 வயதிலும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் 62 வயதிலும் ஓய்வு பெறுகின்றனர்). ஓய்வுபெறும் நீதிபதிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், அவர்கள் கடைசியாகப் பெற்ற முழு சம்பளத்திற்கு இணையாக இருக்க வேண்டும். இது அவர்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும். ஓய்வுபெற்ற நீதிபதிகள் தீர்ப்பாயங்களில் (Tribunals) பணியமர்த்தப்படுவதைத் தடை செய்ய வேண்டும். அவர்களை அரசுப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது தீர்ப்புகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார்.
நீதிமன்ற உள்கட்டமைப்பு
சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்திற்கு மிகக் குறைவான நிதி ஒதுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், உலகம் செயற்கை நுண்ணறிவு (AI) புரட்சியின் உச்சத்தில் இருக்கும்போது, இந்தியாவில் பல மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்கள் கணினிகள் மற்றும் கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகளுக்காகப் போராடி வருகின்றன. நீதித்துறைக்கு நிதி ஒதுக்குவது வெறும் செலவல்ல, அது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். வணிக வழக்குகள் விரைவாகத் தீர்க்கப்பட்டால், தொழில்துறை முதலீடுகள் அதிகரிக்கும் என விளக்கமளித்தார்.
நீதிபதிகளின் சம்பள உயர்வு!
நீதிபதிகள் செய்யும் கடினமான பணிக்கு இப்போது வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லை என்றும், அவர்களுக்கு உரிய கௌரவமான ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் நிதியமைச்சரிடம் அவர் வலியுறுத்தினார்.
நீதிபதிகளின் ஓய்வு வயது ஏன் உயர்த்தப்பட வேண்டும்?
இந்தியாவில் ஒரு வழக்கை முடிக்கப் பல ஆண்டுகள் ஆகின்றன. அனுபவம் வாய்ந்த நீதிபதிகள் 62 அல்லது 65 வயதிலேயே ஓய்வு பெறும்போது, ஒரு பெரிய Knowledge Gap உருவாகிறது. ஓய்வு வயதை உயர்த்துவதன் மூலம் நிலுவையில் உள்ள லட்சக்கணக்கான வழக்குகளை விரைவாக முடிக்க முடியும் என்பதே பி.வில்சன் போன்றோரின் வாதமாகும்.