மதுரை கள்ளழகர் கோவிலில் அறங்காவலர் குழு இல்லாமல் 40 கோடி ரூபாயில் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற ஒப்புதல் அளித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை அழகர் கோவிலின் உபரி நிதியில் வணிக நோக்கத்தில் கட்டடங்கள் கட்டுவது தொடர்பான தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யவும், கட்டடங்கள் கட்ட தடை விதிக்கக் கோரியும் மேலூர் வெள்ளரிப்பட்டியைச் சேர்நத பிரபு, நாகப்பட்டினம் திருக்கணாபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், சௌரிராஜன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இவற்றை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள தீர்ப்பில், கள்ளழகர் கோயிலில் அறங்காவலர் குழு இல்லாமல் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது, இவ்வாறு கோயிலை அரசு தனிப்பட்ட சொத்தாக கருதி முடிவெடுக்க முடியாது, இதனால் அழகர் கோவில் நிதி 40 கோடி ரூபாயில் வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்கி அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள்ளனர்.
கோவில் நிதி 107 கோடி ரூபாயிலிருந்து 62 கோடி ரூபாயாக குறைந்துள்ளது, இது தெய்வக்குற்றம், வேலியே பயிரை மேய்ந்த கதையாகும், கோயிலில் தணிக்கை யாரால், எவ்வாறு செய்யப்படுகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்
எனவே கோவிலில் தணிக்கை எப்படி செய்யப்படுகிறது என்ற விபரங்களை 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அழகர் கோவிலுக்கு புதிய அறங்காவலர் குழுவை அமைப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், செயல் அலுவலர் நியமிக்கப்பட்டு 5 ஆண்டுக்கு மேலாகியிருந்தால், அவரை நீக்கிவிட்டு நிர்வாகம் தெரிந்த மேலாளரை நியமிக்க வேண்டும் என்றும், கள்ளழகர் கோயில் நிர்வாகம் தொடர்பாக சட்டம் மற்றும் விதிமுறைகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
கோவில் வசந்த மண்டப சுவர்களில் மகாபாரத காட்சிகளை சித்தரிக்கும் ஓவியங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டிருப்பது வேதனையளிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த ஓவியங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், இந்தாண்டு வைகாசி பண்டிகைக்குள் மண்டபம் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கோயிலில் பழைய நினைவு சின்னங்களை மறைக்கும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்வதை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அழகர் கோவிலில் பிராணிகளை வதைப்பது நீண்ட காலமாக வழிபாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருவதால், இது பக்தர்களின் நம்பிக்கையைத் தொடும் ஒரு அம்சமாக இருப்பதாலும் இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
புதிய பணியாளர் குடியிருப்புகள் அக்னி புஷ்கரணிக்கு அருகில் கட்டப்படுவதால், அது மாசுபடும் என்பதை அதிகாரிகள் கருத்தில் கொள்ளவில்லை என்றும், அக்னி புஷ்கரணிக்கு மிக அருகில் பணியாளர் குடியிருப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டக்கூடாது என உத்தரவிட்டனர். அதனடிப்படையில், பணியாளர் குடியிருப்பு திட்டம், கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்ட நீதிபதிகள், இத்திட்டங்களுக்கு செல்விடப்பட்ட தொகையை அரசு கோயில் நிர்வாகத்துக்கு உடனடியாக திரும்ப வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
கோவில்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு ஒப்புதல் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை என்றும், இனிவரும் நாட்களில் ஒப்புதல் பெறாமல் எந்த வளர்ச்சி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது என கோவில் நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேபோல் கோயிலில் மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களுக்கு அருகே நடைபெற்ற கட்டுமானங்கள் உடனடியாக அகற்றப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதையும் சுட்டிடக்காட்டினர்.
இந்த உத்தரவாதங்களை நிறைவேற்றியது தொடர்பாக 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.