எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடிய நிலையில், அவரது மனுவுக்கு 2 நாட்களில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் மேற்கு வங்க மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளில் பெரும் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, முதலமைச்சர் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
தானே நேரில் ஆஜராகி வாதாட உள்ளதாக கூறி மம்தா பானர்ஜி முன்கூட்டியே அனுமதி கேட்டிருந்த நிலையில், மனுதாரர் என்ற முறையில் உச்ச நீதிமன்றமும் அவருக்கு அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி நேரில் ஆஜராகி வாதத்தை தொடங்கிய மம்தா பானர்ஜி எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு 6 முறை கடிதங்கள் எழுதியும், இதுவரை எந்த பதிலும் இல்லை என்றும், நீதிமன்றம் சென்றும் நீதி மறுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மம்தா வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, எந்த வாக்காளர்களும் விடுபட்டு விடக்கூடாது என்பது தான் நீதிமன்றத்தின் நிலைப்பாடு என தெரிவித்தார்.
அப்போது இதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆராய வழக்கை தள்ளிவைக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் தரப்பு கோரிக்கை வைத்த நிலையில், இனியும் மெத்தனமாக செயல்படுவதை ஏற்க முடியாது என தெரிவித்து, வழக்கை தள்ளிவைக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நிராகரித்தனர்.
அதனை தொடர்ந்து வாதங்களை முன்வைத்த மம்தா பானர்ஜி, தன்னுடைய அடையாள அட்டையில் இருப்பது எனது புகைப்படமே அல்ல, மாறாக ஒரு செய்தி தாளில் இருந்து தேர்தல் ஆணையம் எடுத்து பயன்படுத்தி உள்ளது என்று குற்றம்சாட்டினார். மேலும் எஸ்.ஐ.ஆர். பணிகளில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த பிறகும் மேற்கு வங்கத்தை மட்டுமே குறி வைப்பது ஏன் என்றும் கேள்வியெழுப்பினார்
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மனு மீது இரண்டு நாட்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை திங்கட்கிழமைக்கு (பிப்ரவரி 9) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.