காசோலை மோசடி வழக்கில், 2 கோடியே 52 லட்சம் ரூபாயை 4 வாரத்தில் செலுத்தத் தவறினால் ஆறு மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், கோச்சடையான் பட தயாரிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்து அவரது மகள் சௌந்தர்யா இயக்கிய கோச்சடையான் திரைப்படத்தை மீடியா ஒன் க்ளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பட வெளியீட்டுக்காக, ஆட் பியூரோ அட்வர்டைசிங் நிறுவனத்திடம் 10 கோடி ரூபாயை கடன் பெற்றிருந்தது. கடனை திருப்பிச் செலுத்தும் வகையில், மீடியா ஒன் க்ளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம், 5 கோடி ரூபாய்க்கான இரண்டு காசோலையை ஆட் பியூரோ அட்வர்டைசிங் நிறுவனத்திடம் வழங்கியிருந்தது.
காசோலையை வங்கியில் செலுத்திய போது, பணம் வழங்குவதை நிறுத்தி வைக்க கூறி, மீடியா ஒன் க்ளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் வங்கிக்கு கடிதம் அனுப்பியிருந்ததால், காசோலைக்கு பணம் வழங்கப்படவில்லை.
இதையடுத்து, மீடியா ஒன் க்ளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் மீதும், அதன் இயக்குனர் முரளி மனோகர் மீதும் ஆட் பியூரோ அட்வர்டைசிங் நிறுவன உரிமையாளர் அபிர்சந்த் நஹர், காசோலை மோசடி வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை அல்லிகுளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், முரளி மனோகருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்தது. மேலும் 7 கோடியே 70 லட்சம் ரூபாயை இழப்பீடாக அபிர்சந்த் நஹருக்கு வழங்கும்படி, முரளி மனோகருக்கு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து முரளி மனோகர், கடந்த 2023ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், விசாரணை நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து, 2 கோடியே 52 லட்சம் ரூபாயை நான்கு வாரத்தில் முரளி மனோகர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு செலுத்தத் தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளார்.