மாம்பழம் சின்னத்தை முடக்கவும், தன்னை தலைவராக அங்கீகரிக்கும் வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்தல் அறிவிப்பை தள்ளிவைக்கவும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பா.ம.க. தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாசை அங்கீகரித்து இந்திய தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, நிறுவனரான தன்னை தலைவராகவும், தான் நியமித்த நிர்வாகிகளையும் அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும்,
அதுவரை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் தேர்தல் அறிவிப்பை தள்ளிவைக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று, பா.ம.க. சார்பில் நிறுவனர் மருத்துவர் எஸ்.ராமதாஸ் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதேபோல, உள்கட்சி பிரச்சினை தொடர்பான உரிமையியல் வழக்கில் தீர்வு எட்டப்படும் வரை, பாமக-வின் மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்கும்படி, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மற்றொரு மனுவும் தாக்கல் செய்திருந்தார்.
இந்த இரு வழக்குகளும் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, 2025ஆம் ஆண்டு மே மாதமே அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், போலியான ஆவணங்களை தாக்கல் செய்து, 2026ஆம் ஆண்டு வரை பதவிக்காலம் இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் தரப்பு வழக்கறிஞரான டாக்டர் அருள் குற்றம்சாட்டினார்.
மேலும் ராமதாசை கட்சியின் தலைவராக அறிவிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், கட்சியை அன்புமணி அபகரித்துக் கொண்டார். 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கியவர் ராமதாஸ் தான் என நிதிபதிகளிடம் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், இதே விவகாரம் தொடர்பாக செய்யப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி உள்ளதாக குறிப்பிட்டு, அந்த உத்தரவின் அடிப்படையில், அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சியான பாமக-வின் உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்றும், மாம்பழம் சின்னம் முடக்கம் செய்வது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது என விளக்கமளிக்கப்பட்டது.
விசாரணையின் போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, தந்தை சொல்லை மகன் கேட்பதில்லையா என கேள்வி எழுப்பினார். இதற்கு ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர், ஆமாம், தந்தை சொல்வதை மகன் கேட்பது இல்லை என்று பதிலளித்தார்.

அன்புமணி ராமதாஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், இந்த நீதிமன்றத்தில் சில மாதங்களுக்க முன்னர் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் சமரசம் செய்து வைக்க முயற்சித்தார், ஆனால் நடைபெறவில்லை என்று தெரிவித்ததுடன், நிறுவனருக்கு வயதாகிவிட்டதாகவும், அன்றாட அரசியலில் ஈடுபட முடியவில்லை என்றும் தெரிவித்ததுடன், இந்த வழக்கு மனுவில் நிறுவனர் ராமதாஸ் போட்டுள்ளதாக சொல்லப்படும் கையெழுத்து சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
இதை மறுத்த ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் ராமதாஸ் நடைபயிற்சி மேற்கொள்கிறார், நீச்சலில் ஈடுபடுகிறார், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்று கூறி, அன்புமணி தரப்பில் கட்டுக்கதைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன என குற்றம்சாட்டினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துவிட்டு உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்வதா? எனக் கூறி, நீதிமன்ற நேரத்தை வீணடித்தால் அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்தனர்.

பின்னர், உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது என்பதால், உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிக் கொள்ளலாம் என கூறி, இரு வழக்குகளும் விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.