லெஜண்ட் சரவணன் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள ‘லீடர்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில், இப்படத்தைப் பதிவிறக்கம் செய்யவோ அல்லது சட்டவிரோதமாக ஒளிபரப்பவோ தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லெஜண்ட் சரவணனின் திரைப் பயணம்
‘தி லெஜண்ட்’ (2022) படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அருள் சரவணன், தற்போது ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘லீடர்’ படத்தில் நடித்துள்ளார். தனது மகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலில், ஒரு தந்தையாக வில்லன்களை எதிர்கொண்டு மகளை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே இப்படத்தின் விறுவிறுப்பான கதையாகும்.
இப்படத்தின் டீசர் 2 கோடிப் பார்வையாளர்களைக் கடந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று பிரம்மாண்டமாக வெளியானது.
1,404 இணையதளங்களுக்குத் தடை கோரி மனு
இப்படம் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் கசிவதைத் தடுக்க, லெஜண்ட் சரவணன் சார்பில் டி. ஸ்டான்லி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
பல மாத உழைப்பு மற்றும் மிகப்பெரிய பொருட்செலவில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. 1,404 இணையதளங்கள் மற்றும் 26 இணையச் சேவை நிறுவனங்கள் மூலம் படம் சட்டவிரோதமாக வெளியானால், தயாரிப்பு நிறுவனத்திற்குப் பெரும் நஷ்டம் ஏற்படும். இது திரைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்,” என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் வாதிட்டார்
நீதிபதியின் உத்தரவு
இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ‘லீடர்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதிக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் இணைய சேவை நிறுவனங்கள் (ISPs) மற்றும் கேபிள் டிவி நிறுவனங்கள், இந்தப் படம் சட்டவிரோதமாகப் பகிரப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காப்புரிமை மீறல்களை தடுத்து, படத்தின் வணிக ரீதியான வெற்றியை உறுதி செய்ய இந்தத் தடை அவசியம் என நீதிபதி குறிப்பிட்டார்.
'ஆன்டி-பைரசி' (Anti-Piracy) சட்டம் - விளக்கம்!
திரைப்படங்களைத் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடுவது 'காப்புரிமைச் சட்டம் 1957'-ன் படி குற்றமாகும். இதற்காகத் தயாரிப்பு நிறுவனங்கள் முன்கூட்டியே நீதிமன்றத்தை அணுகி 'ஜான் டோ' (John Doe) வகை உத்தரவுகளைப் பெறுவது வழக்கமாகிவிட்டது. இதன் மூலம் அடையாளம் தெரியாத இணையதளங்கள் கூடத் தடை செய்யப்பட வாய்ப்புள்ளது.