டிஜிபி பதவிகளுக்கு குறித்த நேரத்தில் பெயர்களை முன்மொழிந்து பரிந்துரைக்காத மாநிலங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரும்படி யு.பி.எஸ்.சி.-க்கு உச்ச நீதிமன்றம் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மாநிலங்களுக்கான காவல் துறை தலைவர்(DGP) நியமனங்களில் காவல்துறை மூத்த அதிகாரிகளின் பெயர்களை சம்பந்தப்பட்ட மாநில அரசானது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு (UPSC) சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, வயது, பணிக்காலம், பணிமூப்பு உள்ளிட்ட பல தகுதிகளின் கீழ் குறிப்பிட்ட சில அதிகாரிகளின் பெயர்களை UPSC மீண்டும் மாநில அரசுக்கு பரிந்துரை செய்யும். அதிலிருந்து ஒர் அதிகாரியை டிஜிபியாக மாநில அரசு தேர்ந்தெடுத்துக் கொள்ள அதிகாரம் உள்ளது.
ஆனால் சில மாநில அரசுகள் டிஜிபி நியமனத்தில் பெயர்களை பரிந்துரைப்பதில் காலதாமதம் செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இதில் தெலங்கானா மாநில டிஜிபி பதவிக்கு பெயர்களை பரிந்துரை செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில காவல்துறை தலைவர் பதவிகளுக்கு உரிய நேரத்தில் பரிந்துரைகளுக்கான முன்மொழிவுகளை அனுப்புமாறு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுத மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு அதிகாரம் அளிப்பதாக உத்தரவிட்டுள்ளது.
மேலும், டிஜிபி பதவிகளுக்கு குறித்த நேரத்தில் முன்மொழிவுகள் அனுப்பாத மாநிலங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் எனவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு மனு தாக்கல் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் விளக்கம் கேட்கப்படும் என்றும், திருப்தியாளிக்காவிட்டால் மாநில அரசின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டு மட்டுமே நியமிக்கப்பட்டு, நிரந்தர டிஜிபி-யை நியமிக்க பல மாதங்களாக காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்பதால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு, தமிழ்நாட்டுக்கும் பொருந்தும் என்ற சூழல் உருவாகியுள்ளது.