ஜனநாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற கே.வி.என். புரொடக்சன்ஸ் அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தணிக்கை குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பி மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி படத்தை தயாரித்த கே.வி.என். புரொடக்சன்ஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க வேண்டும் என்று ஜனவரி 9ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கை மீண்டும் அவரிடமே விசாரணைக்கு அனுப்பி ஜனவரி 27ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும் படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பியதை எதிர்த்து திருத்த மனு தாக்கல் செய்ய பட தயாரிப்பு நிறுவனத்திற்கு தலைமை நீதிபதி அமர்வு அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் படத்தின் தணிக்கைச் சான்று தொடர்பாக மறு ஆய்வு குழுவை அணுகி உள்ளதால், தனி நீதிபதி முன் உள்ள வழக்கை திரும்ப பெற உள்ளதாக கூறி, கே.வி.என். புரொடக்சன்ஸ் தரப்பில் உயர் நீதிமன்ற பதிவு துறைக்கு கடிதம் கொடுக்கப்பட்டது.
இந்த கடிதத்தின் அடிப்படையில், “மனுவை வாபஸ் பெறுவதற்காக” என்ற தலைப்பில் பட தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கு, தனி நீதிபதி பி.டி.ஆஷா முன் பட்டியலிடப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, வழக்கை வாபஸ் பெறுவதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆஷா வழக்கை திரும்பப்பெற அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.