தமிழ்நாடு முழுவதும் நடத்த தேசிய லோக் அதாலத்தில், 1,03,366 வழக்குகளில், ரூ. 1,034.73 கோடிக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டன.
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவரும் வகையில், இரு மாதங்களுக்கு ஒரு முறை தேசிய லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் இன்று (மார்ச் 14) நடந்த லோக் அதாலத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐந்து அமர்வுகளும், மதுரை கிளையில் இரண்டு அமர்வுகளும் வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொண்டன. மாவட்டம், தாலுகா அளவில், 516 அமர்வுகள் அமைக்கப்பட்டு, நிலுவையில் இருந்த 90 ஆயிரத்து 921 வழக்குகள், நீதிமன்ற விசாரணைக்கு வராத 12 ஆயிரத்து 445 வழக்குகள் என, மொத்தம் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தில் ரூ. 7 கோடி அளவிற்கான இழப்பீட்டுத் தொகையையும், சமரசத் தீர்ப்பு நகல்களையும், காசோலைகளையும் சமரசம் செய்யப்பட்ட வழக்குகளைச் சேர்ந்த சில வழக்காடிகளிடம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினருமான நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா வழங்கினார்.

இன்றைய லோக் அதாலத் மூலம் ஆயிரத்து 34 கோடியே 93 லட்சத்து 46 ஆயிரத்து 325 ரூபாய் வரை இழப்பீடுகள் வழங்கி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழு உறுப்பினர் செயலர் எஸ்.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.