கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் காவல் நிலைய சித்திரவதை மரண வழக்கில், மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது.
வழக்கின் பின்னணி
கொரோனா ஊரடங்கு காலத்தில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (59) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோரை, கடையைத் தாமதமாக அடைத்ததாகக் கூறி ஜூன் 19, 2020 அன்று போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து அவர்கள் விடிய விடியக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதில், அடுத்த சில நாட்களில் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
சிபிஐ விசாரணை மற்றும் சாட்சியங்கள்
இந்த வழக்கை முதலில் சிபிசிஐடி (CB-CID) விசாரித்த நிலையில், பின்னர் மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐ (CBI) வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், தந்தை-மகன் இருவரும் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டதே மரணத்திற்குப் பிரதான காரணம் என்று உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த வழக்கில் பெண் காவலர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 9 போலீசார் கடந்த 6 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் (மற்றொரு காவலர் பால்துரை கோவிட் பாதிப்பால் உயிரிழந்தார்).
இது திட்டமிட்ட கொலை!
நீதிபதி முத்துக்குமரன் தனது தீர்ப்பில் ஜெயராஜிற்கு இருதய மற்றும் நுரையீரல் பாதிப்புகள் இருந்தபோதிலும், அவர்கள் நோய் தொற்றால் உயிரிழக்கவில்லை. கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டதாலேயே அவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதை அரசு மருத்துவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கை உறுதி செய்கிறது.
இது சாதாரண மரணம் அல்ல, திட்டமிட்ட ‘கொலை’ என்பதை தடய அறிவியல் ஆய்வுகளும் (Forensic Report) சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்துள்ளன.
தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் பதிவு செய்திருந்த வழக்கு முற்றிலும் ‘பொய் வழக்கு’ என்பது விசாரணையில் அம்பலமானது.
காயமடைந்த இருவரும் அணிந்திருந்த ரத்தக்கரை படிந்த ஆடைகளை உறவினர்களிடம் கொடுத்து குப்பைத் தொட்டியில் போடச் சொல்லி, மிக முக்கிய ஆதாரத்தைக் காவல்துறையினர் அழிக்க முயன்றுள்ளனர்.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 போலீசார்
இந்த வழக்கில் சிபிஐ (CBI) தாக்கல் செய்த சுமார் 2,427 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 9 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்தது
தண்டனை விவரம்
9 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கான தண்டனை விவரங்கள் வரும் மார்ச் 30, 2026 அன்று அறிவிக்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்துள்ளார். அதுவரை குற்றவாளிகள் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
சிபிஐ தரப்பு வாதமும் நீதிமன்றத்தின் ஏற்பும்
இந்த வழக்கில் சிபிஐ முன்வைத்த அனைத்துக் குற்றச்சாட்டுகளும் உண்மை என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குறிப்பாக, காவல் நிலையத்திற்குள்ளேயே அனைத்துத் தடயங்களையும் அழிக்கக் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் முயன்றதை நீதிமன்றம் வன்மையாகக் கண்டித்துள்ளது. அனைத்துத் தரப்பு விசாரணைகளையும் ஆதாரங்களையும் சீர்தூக்கிப் பார்த்த நீதிபதி, சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் குற்றவாளிகளே எனத் தீர்ப்பளித்தார்.
அதிகார அத்துமீறலுக்குக் கிடைத்த பாடம்
ஒரு காவல் நிலையம் என்பது மக்களின் பாதுகாப்பிற்கானது. ஆனால், அங்கேயே இரண்டு அப்பாவிகள் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தது மனித உரிமை மீறலின் உச்சகட்டமாகும். இன்றைய தீர்ப்பு, சீருடை அணிந்திருந்தாலும் சட்டத்திற்குப் புறம்பாக நடப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதை உரக்கச் சொல்லியுள்ளது. இது பொதுமக்களிடையே நீதித்துறையின் மீதான நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்டியுள்ளது.